சனி, 19 செப்டம்பர், 2020

லெனின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஸ்டாலினுடன் ஆன அவரது நட்புறவு எப்படிப்பட்டதாக இருந்தது?





லெனின் தனது இறுதிக் காலத்தில் ஸ்டாலினுடன் மிக மோசமான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்...

 

இருவருக்கும் இடையில் உறவு மிக மோசமான முறையில் சீர்கெட்டு இருந்தது...

 

லெனின் உடல்நிலை தேறினால், தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்டாலின் அஞ்சினார்...

 

ஆகவே தான் அவர் லெனினுக்கு விஷம் வைத்துக் கொலை செய்தார் என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது...

 

இவையெல்லாம் ஸ்டாலின் குறித்து டிராட்ஸ்கியவாதிகள் கூறும் அவதூறுகளின் ஒரு பகுதி.

 

லெனின் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் இருந்த போது, முழுமையாக அவருடன் இருந்த லெனினின் சகோதரி மரியா உலியனோவா, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு இடையிலான உறவு பற்றிக் கூறியது:

 

லெனின் உண்மையில் ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டினார். உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லெனின் முதல் முறையாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போதும், 1922 டிசம்பரில் இரண்டாவது முறை பாதிக்கப்பட்ட போதும், அவர் ஸ்டாலினை அழைத்து மிக நெருக்கமான பணிகளைக் கொடுத்தார்.....

 

மேலும், தான் ஸ்டாலினுடன் மட்டுமே பேச விரும்புவதாகவும், வேறு யாருடனும் பேச விரும்பவில்லை என்றும் லெனின் வலியுறுத்தினார்.

 

பொதுவாக அவர் நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுமையும், தோழர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்த காலம் வரையிலும், அவர் ஸ்டாலினையே அதிகமான முறைகள் அழைத்தார்.

 

மேலும் அவர் மோசமாக நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுவதும், பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஸ்டாலினைத் தவிர வேறு எவரையும் அழைக்கவே இல்லை”.

 

இது போன்ற தரவுகள் தமிழில் இல்லை என்பதால் இங்கே டிராட்ஸ்கிய கூட்டம் பொய்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறது.

 

இன்னும் எத்தனை காலம்?

 


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா ஸ்டாலின்?



ஸ்டாலின் குறித்த அவதூறுகளின் உச்சகட்டமாக, லெனினின் மரணத்திற்கே ஸ்டாலின் தான் காரணம் என்றும், அவர் லெனினை விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்றும் அதிர வைக்கும் சந்தேகம் ஒன்றை எழுப்பினார் டிராட்ஸ்கி.

 

லெனினது மரணத்திற்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதிய “Did Stalin Poison Lenin” என்ற தலைப்பில் எழுதிய அவர் இந்த சந்தேகத்தை எழுப்பினார். அத்தனை ஆண்டுக் காலம் வரையில் அவர் அத்தகைய கருத்து எதையும் வெளிப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. டிராட்ஸ்கியின் கூற்றுகளைப் புனித உண்மையாகத் தலையில் தூக்கித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள் கூட, பதினாறு ஆண்டுக்காலத்திற்குப் பிறகு அவர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.


இதற்கெல்லாம் டிராட்ஸ்கியிடம் இருந்து எந்த விளக்கமும் கிடையாது. ஸ்டாலின் மீதான வன்மத்தில் ஊறிப் போயிருந்த டிராட்ஸ்கியின் மூளையில் தோன்றிய வளமான கற்பனை தான் இந்தக் குற்றச்சாட்டு என்பதே இதற்குக் காரணம் ஆகும். இந்த விசயத்தில் ஸ்டாலின் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய போதிலும் அதற்கு ஆதரவாக டிராட்ஸ்கி ஒற்றைச் சாட்சியத்தைக் கூட முன்வைக்கவில்லை.

 

மாறாக, மொட்டையான சந்தேகங்கள், ஆதாரமற்ற அவதூறுகள், திரிக்கப்பட்ட உண்மைகள் ஆகியவை மட்டுமே அவரது குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக இருந்தன. இதையடுத்து, லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற இந்த நிகழ்வு தான் ஸ்டாலினிசத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக டிராட்ஸ்கிய ஆதரவு பிரச்சார பீரங்கிகள் தொண்டை கிழியக் கத்தத் தொடங்கின.


ஸ்டாலினைக் கடுமையாக விமரிசனம் செய்து டிராட்ஸ்கியை உயர்த்திப் பிடிக்கும் ஐசாக் தாய்ஸ்சர் போன்றவர்கள் கூட “லெனினுக்கு ஸ்டாலின் விஷம் கொடுத்து இருக்கலாம் என்று டிராட்ஸ்கி கூறுகிறார். ஆனால், இது டிராட்ஸ்கியே கூறுவது போல தெளிவற்ற ஒரு ஊகம் மட்டுமே தவிர வேறில்லை. 1939-40ஆம் ஆண்டு தான் அந்தக் குற்றச்சாட்டை முதன் முதலாக அவர் கூறினார், அது வரை ஸ்டாலினுக்கு எதிரான தனது பல ஆண்டுக் காலப் போராட்டத்தில், டிராட்ஸ்கி அத்தகைய குற்றச்சாட்டை ஒருபோதும் முன்வைக்கவில்லை அல்லது குறிப்பாகக் கூட உணர்த்தவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது அது உண்மையற்றதாகத் தெரிகிறது” என்று கூற வேண்டி இருந்தது.

 

லெனினின் இறுதிக் காலத்தில் அவரது கண்ணும் காதுமாக, வெளி உலகத்துடன் அவருக்கு ஒரே முக்கிய இணைப்பாக இருந்த அவரது மனைவி குரூப்ஸ்கயா இத்தகைய எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் உத்திரவுப்படி லெனின் பார்வையாளர்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது, எனவே அவரது பார்வையைத் தாண்டி யாரும் லெனினை அணுகி இருக்க முடியாது. அவரும் லெனினது சகோதரி மற்றும் அவரது செயலாளர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க உரிமை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் யாரும் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இது குறித்து சிறு சந்தேகத்தைக் கூட எழுப்பவில்லை.


அப்படி இருக்கும் போது லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என்று டிராட்ஸ்கி சொல்வது அவரது மனப்பிறழ்வு மற்றும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியையும் குறிப்பாக ஸ்டாலினையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்னும் வன்மம் காரணமாக கூறப்படும் அவதூறு மட்டுமே தவிர வேறில்லை.


 


திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சீனப் புரட்சியைத் தடுத்தாரா தோழர் ஸ்டாலின்? - 2



தோழர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து, மார்ச் 6, 1953 அன்று சோவியத் யூனியனுக்கு அனுப்பிய தந்தியில் தோழர் மாவோ பின்வருமாறு குறிப்பிட்டார் :

 

சீன மக்கள் புரட்சியின் வெற்றியானது, தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு (அக்கறை), தலைமைத்துவம் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது. சீன மக்கள் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், தோழர் ஸ்டாலினும் சோவியத் ஒன்றியத்தின் மக்களும் அரசாங்கமும் அவரது தலைமையின் கீழ் சீன மக்களின் கட்டுமானத்திற்காக தாராளமான மற்றும் தன்னலமற்ற உதவிகளை செய்துள்ளனர். சீன மக்கள் மீது தோழர் ஸ்டாலின் கொண்டிருந்த ஒரு பெருமதிப்புக்குரிய மற்றும் ஆழமான நட்பு சீன மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும். தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும்

 

டிராட்ஸ்கியவாதிகள் உளறுவது போல தோழர் ஸ்டாலின் சீனப் புரட்சியின் எதிரியாக இருந்தால், அவரது மரணத்தை ஒட்டி தோழர் மாவோ இப்படி ஒரு இரங்கல் செய்தி அனுப்பி இருப்பாரா? சீனப் புரட்சியின் வெற்றி என்பது தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு….மற்றும் ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது என்று தோழர் மாவோ பொய் சொல்லி இருக்கிறாரா? தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும் என்று அவர் எப்படிச் சொல்லி இருக்க முடியும்? .

.

இதன் தொடர்ச்சியாக ‘மாபெரும் நட்புறவு’ என்ற கட்டுரையில் “இன்றைய யுகத்தின் மாமேதை, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் தலை சிறந்த ஆசான், அழிவிலா லெனினது போராளித் தோழர்” என்பதாக தோழர் மாவோ அவர்கள் தோழர் ஸ்டாலின் பற்றிய தனது மதிப்பீட்டை முன்வைத்தார். தோழர் ஸ்டாலின் குறித்து இதற்கு நேர் மாறான மதிப்பீட்டை வைத்திருக்கும் டிராட்ஸ்கியவாதிகள், இவற்றைப் பற்றிப் பேசாமல் அவர் முன்வைத்த ஏதோ ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்னிறுத்திக் காலம் காலமாகப் பேசிக் கொண்டிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சகட்டம் மட்டுமே.

 

இதனை மேலும் தொடர்ந்த தோழர் மாவோ “தனது தத்துவார்த்த நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் மூலம் தமது சகாப்தத்திற்குத் தோழர் ஸ்டாலின் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தோழர் ஸ்டாலின் நமது புதிய சகாப்தம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலக நிலைமை முழுதையும் தலைகீழாக மாற்றியமைப்பதற்கு சோவியத் மக்களுக்கும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்களுக்குக்கும் உதவி செய்துள்ளது” என்றார். தோழர் ஸ்டாலினின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை, நடைமுறைகளை முற்றாக மறுதலிக்கும் டிராட்ஸ்கியவாதிகள் கூட்டம், சீனப் புரட்சி குறித்து தோழர் மாவோவின் கருத்து பற்றிப் பேசும் அதே சமயம் தோழர் மாவோவின் இத்தகைய மதிப்பீடுகளைக் காணாதது போலக் கடந்து போய் விடுவார்கள். அவர்களது அரசியல் நேர்மை அவ்வளவு தான்.

 

தோழர் ஸ்டாலின் படைப்புகள் அனைத்தும் மார்க்சியத்தின் அழிவற்ற ஆவணங்கள். அவரது படைப்புகளான லெனினிசத்தின் அடிப்படைகள், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி [போல்ஷிவிக்] வரலாறு மற்றும் அவரது கடைசி படைப்பான சோவியத் யூனியனில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவை மார்க்சிய-லெனினிசத்தின் கலைக்களஞ்சியமாக அமைகின்றன. அவை கடந்த நூறு ஆண்டுகளில் உலக கம்யூனிஸ்ட் இயக்க அனுபவத்தின் தொகுப்பாகும்… எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டுகளைப் போலவே, சீன கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்களும் தோழர் ஸ்டாலினின் மாபெரும் படைப்புகளில் வெற்றிக்கான எங்கள் சொந்தப் பாதையைத் தேடுகிறோம்” என்று தோழர் மாவோ அறிவித்தார். தோழர் மாவோவின் இந்த மதிப்பீட்டை டிராட்ஸ்கியவாதிகள் முற்றாக மறுப்பார்கள் என்பதில் நமக்கு கொஞ்சமும் ஐயமே கிடையாது, பின்னர் தோழர் மாவோவின் கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பது போலப் பகல் வேடம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் பித்தலாட்டம்?

 

தோழர் ஸ்டாலின் மரணத்திற்குப் பின்பு, குருஷ்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்டு கட்சி அவரை முற்றாக மறுதலிக்கும் போக்கை முழு வேகத்துடன் நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்த போது, தோழர் மாவோ தனிமனித வழிபாட்டுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தோழர் ஸ்டாலினை முற்றாக மறுப்பது “முற்றிலும் தவறானது மற்றும் உள்நோக்கம் உடையது” என்றார். சோவியத் யூனியனே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்ட முதல் நாடு என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், லெனினுக்குப் பின்னர் சோவியத் நாடு மற்றும் கட்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் தலைவராக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார். அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய நாற்பத்தாறு ஆண்டுகளில் (இது 1963ஆம் ஆண்டு எழுதப்பட்டது), அவற்றில் முப்பது ஆண்டுக்காலம் ஸ்டாலின் தான் நாட்டின் மாபெரும் தலைவராக இருந்தார், அவரது செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நினைவுபடுத்தினார். ஸ்டாலினின் பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டார்.

 

ஸ்டாலின் ஒரு முழு வரலாற்றுக் காலம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஆகியவற்றின் சிறந்த தலைவராக இருந்தார், அவரை மதிப்பீடு செய்வதில் அதிக கவனத்தைக் கையாள வேண்டும்” என்று தோழர் மாவோ எச்சரிக்கை செய்தார். ஆனால் டிராட்ஸ்கியவாதிகள் தற்போது செய்வது என்ன? தோழர் மாவோவின் மேற்படி எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கான வசதியான ஒரு வாய்ப்பு ஆக தோழர் மாவோவின் கூற்றைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள், அந்த முயற்சியில் அசிங்கமாகத் தோற்றுப் போகிறார்கள்.

 

“சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஸ்டாலினைப் “பாதுகாக்கிறது” (defending) என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம், நாங்கள் ஸ்டாலினைப் பாதுகாக்கிறோம். குருஷ்சேவ் வரலாற்றை திரித்து, ஸ்டாலினை முற்றிலுமாக மறுக்கும்போது, இயல்பாகவே சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்காக முன்வந்து அவரைக் காப்பாற்றுவது எங்களது தவிர்க்க முடியாத கடமை ஆகிறது” என்றார் மாவோ (On the question of Stalin, September 13, 1963).


சீனப் புரட்சி குறித்த மாவோவின் கருத்துகளைக் கூரை மேல் ஏறி நின்று கொண்டு கூவித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள், இதற்கு பதில் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஸ்டாலினை மறுப்பது சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று தோழர் மாவோ கூறி இருக்கும் போது டிராட்ஸ்கியவாதிகள் அவரை முற்றாக மறுப்பது, அதனைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கம் உடையதாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அதனை மேற்கொள்பவர்கள் சர்வதேச கம்யூனிச இயக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

(தொடரும்)


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சீனப் புரட்சியைத் தடுத்தாரா தோழர் ஸ்டாலின்? - 1



ஸ்டாலின் சீனாவில் புரட்சி நடத்த விடாமல் தடுத்தார் என்று தோழர் மாவோ குற்றம் சாட்டியதாக டிராட்ஸ்கியவாதிகள் தொடர்ந்து தேய்ந்த ரிகார்டு போலப் பேசி வருகிறார்கள். இதன் மூலம் தோழர் ஸ்டாலினை சர்வதேச கம்யூனிசத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசியலுக்கும் எதிரானவர் என்று சித்தரிக்க அவர்கள் முயல்கின்றனர். மேலும் இதன் மூலம் தோழர் ஸ்டாலினை எதிர்க்கும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று காட்டிக் கொள்வது தான் அவர்களது மறைமுக நோக்கம் ஆகும். அது மட்டுமின்றி, இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பதன் மூலம் தோழர் மாவோவுக்கும் தோழர் ஸ்டாலினுக்கும் பகைமை உணர்வு இருந்தது போலவும், சீனப் புரட்சியைக் கொண்டுவருவதற்கு அவரும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தோழர் ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருந்தது போலவும், ஸ்டாலின் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டியே மாவோ சீனப் புரட்சியை நடத்தி முடித்தார் என்பது போன்றதொரு போலியான சித்திரத்தை உருவாக்குவது அவர்களது நோக்கமாக இருக்கிறது.

 

ஏப்ரல் 25, 1956ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்டு கட்சி மத்திய கமிட்டியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய தோழர் மாவோ, விடுதலைப் போர் நடைபெற்ற காலத்தில், ஸ்டாலின் முதலில் புரட்சியைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டார், உள்நாட்டுப் போர் வெடித்தால், சீன நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்வதாகக் கூறி. பின்னர் சண்டை வெடித்தபோது, அவர் எங்களை பாதியளவு நம்பிக்கையுடனும், பாதியளவு அவநம்பிக்கையுடனும் எடுத்துக் கொண்டார்என்று குறிப்பிட்டார்.

 

பின்னர், செப்டம்பர் 24, 1962ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்டு கட்சி எட்டாவது மத்தியக் கமிட்டியின் பத்தாவது பிளீனம் மாநாட்டில் உரையாற்றிய தோழர் மாவோ இது தொடர்பாகப் பின்வருமாறு கூறினார்:

 

“1945ஆம் ஆண்டு, அவர்கள் சீனாவை புரட்சி செய்ய அனுமதிக்கவில்லை. சீனா புரட்சி செய்வதைத் தடுக்க ஸ்டாலின் விரும்பினார், சீனாவில் உள்நாட்டுப் போர் ஏற்படக்கூடாது என்றும் சியாங் கே-ஷேக்குடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சீன தேசம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் சொன்னதை நாங்கள் பின்பற்றவில்லை. புரட்சி வெற்றி பெற்றது. புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் அவர் சீனா ஒரு யூகோஸ்லாவியா ஆக இருக்குமோ, நான் இரண்டாவது டிட்டோவாக மாறி விடுவேனோ என்று அவர் சந்தேகித்தார்…ஸ்டாலின் எப்போது எங்கள் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்? அமெரிக்க எதிர்ப்பு கொரிய உதவிப் போராட்டம் நடைபெற்ற 1950ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இருந்து எங்கள் மீது அவர் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்

 

 

சீனாவில் புரட்சி செய்ய வேண்டாம் என்று தோழர் ஸ்டாலின் அறிவுறுத்தியது உண்மை என்றாலும் கூட, அது அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழ்நிலை வேண்டாம் என்று கருதியதாலோ, அல்லது சீனக் கம்யூனிஸ்டு கட்சி அதை வெற்றிகரமாகச் சமாளித்து புரட்சியை முன்னெடுக்குமா என்ற ஐயப்பாடு காரணமாகவோ தான் அவர் அப்படிச் சொன்னாரே தவிர இதற்கு வேறு காரணங்கள் கிடையாது. இரண்டு வெவ்வேறு தருணங்களில் தோழர் மாவோ கூறியதும் இதையே நிரூபிக்கிறது. ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார் என்று கூறுவதும் சக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் உலகின் முதலாவது சோசலிசத் தாயகத்தின் காவலர் என்ற வகையிலும் அவர் கூறிய அறிவுறுத்தல் தானே தவிர வேறில்லை. அவர் சீனப் புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

 

 

அது மட்டுமின்றி, சீனப் புரட்சி நடைபெற்ற காலத்திலும் தோழர் ஸ்டாலின் தோழர் மாவோ உடன் தொடர்பில் இருந்தார், சீனக் கம்யூனிஸ்டு கட்சிக்கு உதவிகளும், வழிகாட்டுதலும் செய்து வந்துள்ளார் என்பதை அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற தந்தித் தொடர்பு ஆவணங்கள் தெரியப்படுத்துகின்றன. ஸ்டாலினின் உதவி இன்றி, சீனப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகளின் சிந்தனை மையங்களும் (think tank) கூட ஒப்புக் கொண்டுள்ளன.

 

எடுத்துக்காட்டாக, சோவியத் யூனியனின் அரசியல் மற்றும் இராணுவ உதவி இன்றி ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது என்பதை வில்சன் சென்டர் ஆவணக்காப்பக ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. சீனப் புரட்சியின் ஒவ்வொரு தருணத்திலும் ஸ்டாலினும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும் அளித்த இத்தகைய உதவி மற்றும் ஒத்துழைப்பே சீனப்புரட்சிக்குப் பிந்தைய சீன-சோவியத் நட்புறவுக்கு அடித்தளமாக இருந்தது.

 

உண்மை அப்படி இருக்கும் போது தோழர் மாவோ குறிப்பிட்டதை ஏதோ ஒரு சதித் திட்டம் என்கிற அளவுக்கு பெரிதுபடுத்திப் பேசுவது டிராட்ஸ்கியவாதிகள் தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வது என்ற தங்களது செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காகச் செய்வது மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

 

டிராட்ஸ்கியவாதிகளின் இந்தக் குற்றச்சாட்டைத் தெளிவுபடுத்துவதற்கு, தோழர் ஸ்டாலின் அவரது ஆளுமை மற்றும் அவரது பங்களிப்பு ஆகியவை குறித்து தோழர் மாவோ எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

 

ஆகஸ்டு மாதம் 1937ஆம் ஆண்டு தோழர் மாவோ எழுதிய ‘முரண்பாடுகள் குறித்து’ என்ற கட்டுரையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் உருவாக்கிய இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவத்தை எவ்வாறு லெனினும் ஸ்டாலினும் மேலும் வளர்த்தனர் என்பதைக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுரையில் மட்டுமே லெனின் மற்றும் ஸ்டாலின் என்று ஆறு முறை அவர் குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும். எனவே, மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் லெனின் என்னும் வரிசையில் தத்துவ ஆசானாக தோழர் ஸ்டாலினை அவர் மதிப்பிட்டார் இது தெளிவு படுத்துகிறது.

 

மேலும் “……… சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, லெனின் மற்றும் ஸ்டாலினின் சரியான சிந்தனைக்கும் டிராட்ஸ்கி, புகாரின் மற்றும் பிறரது தவறான சிந்தனைக்கும் இடையிலான முரண்பாடுகள் முதலில் ஒரு பகை முரண்பாடு வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, ஆனால் பின்னர் அவை பகை முரண்பாடு ஆக வளர்ந்தன என்பதைக் காட்டுகிறது” என்று இரண்டையும் வேறுபடுத்திக் காட்டினார் தோழர் மாவோ. தவறான சிந்தனை மற்றும் பகை முரண்பாடு என்று தோழர் மாவோவினால் வர்ணிக்கப்பட்ட டிராட்ஸ்கிய சிந்தனை மற்றும் அதனைச் சுமந்த பகைமுரண்பாடு உடையவர்கள், மாவோவின் விமரிசனத்துக்குப் பின்னே தங்களது உண்மை முகத்தை ஒளித்துக் கொள்ள முற்படுகிறார்கள்.

 

இன்னொரு தருணத்தில் “சீன மக்களின் விடுதலை என்னும் லட்சியத்திற்கான உண்மையான நண்பர் ஸ்டாலின். கருத்து வேற்றுமைகளை விதைப்பதற்கான எந்த முயற்சியும், பொய்களும், அவதூறுகளும், ஸ்டாலின் மீதான சீன மக்களின் முழு மனதுள்ள அன்பையும், மரியாதையையும், சோவியத் யூனியனுக்கான நமது உண்மையான நட்பையும் பாதிக்காது” என்று தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஆனால் டிராட்ஸ்கியவாதிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் இன்றுவரை அத்தகைய முயற்சிகளையும், பொய்களையும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகக் கேவலமான உண்மையாகும்.

 

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் தோழர் மாவோ மேற்கண்ட தனது கருத்தில் அப்படியே உறுதியாக இருந்தார். அக்டோபர் சோசலிசப் புரட்சியின் முப்பத்தொன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி நவம்பர், 1948ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையில், சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றதன் முதல் ஆண்டு நிறைவை ஒட்டி தோழர் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டிய தோழர் மாவோ, “ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திசையில் தான் வரலாறு உருவாகியுள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியாளர்களின் முன்னணி முதலில் லெனின் அவர்களாலும், அவரது மரணத்திற்குப் பிறகு ஸ்டாலின் அவர்களாலும் உருவாக்கப்பட்டது என்று புகழாரம் சூட்டினார். அக்டோபர் புரட்சி மற்றும் லெனினின் மரணத்திற்குப் பின்னர் அதனை முன்னெடுத்துச் செல்வது ஆகிய விசயங்களில் தோழர் ஸ்டாலினின் பங்களிப்பை தோழர் மாவோ எத்தனை ஆழமாக மதிப்பிட்டார் என்பதை நாம் காண்கிறோம். சீனப்புரட்சி முழு வெற்றியடைவதற்கு முந்தைய காலத்தில், சீனக் கம்யூனிஸ்டு கட்சி இன்னமும் தனது உள்நாட்டு எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தக் கருத்து வெளியானது என்பதைக் கவனிக்க வேண்டும்.

(தொடரும்)


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

லெனினது கடிதமும் ஸ்டாலினும்

 லெனின் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மூன்று முறை பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்டார். தனது பேசும் திறனை இழந்தார், அவரது வலது பக்கம் முழுமையாக செயலிழந்தது.




மருத்துவர்களுடன் போராடி தினசரி சில நிமிடங்கள் தனது செயலாளர்களுக்கு உத்திரவுகளைப் பிறப்பிக்கும் உரிமையை வலுக்கட்டாயமாகப் பெற்றிருந்தார் லெனின். ஸ்டாலின் மருத்துவர்கள் அறிவுரைக்கு இணங்க கட்சி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் லெனினுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் லெனினது மனைவி மருத்துவர்களின் அறிவுரையை மீறி அவர் விரும்பிய ஆவணங்களைப் பெற்றுத் தந்தும், அவர் சொல்லச் சொல்ல கடிதங்களை எழுதியும் வந்தார்.

இதனால் ஒரு முறை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று ஸ்டாலின் எச்சரித்தது அவர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தியது. மேலும் லெனின் மனைவியைத் தொலைபேசியில் அழைத்த ஸ்டாலின் அவரைக் கடுமையாகக் கண்டித்தார்.

இதுவும் லெனினது காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த லெனின் “எனது மனைவிக்கு எதிரான செயலை எனக்கு எதிரானதாகவும் நான் கருதுவேன். எனவே நீங்கள் சொன்னதைத் தவறென்று ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்கப் போகிறீர்களா அல்லது நமக்கிடையே உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளப் போகிறீர்களா என்பதைக் கவனத்துடன் நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறினார்.

இதற்கு உடனே பதிலளித்த ஸ்டாலின் “நான் கூறியதை வாபஸ் வாங்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் என்ன பிரச்சினை, எனது தவறு எங்கே இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார். லெனின் மனைவிக்கும் இது போன்ற மன்னிப்புக் கோரும் கடிதத்தை அவர் எழுதியதாகத் தெரிகிறது.

லெனினிடம் இருந்து வந்த மேற்கண்ட கடிதம் ஸ்டாலினுக்கு உண்மையில் உறுத்தலை ஏற்படுத்தியது. தனது வாழ்நாள் இறுதிவரை லெனினின் இந்தக் கடித்த்தை ஸ்டாலின் வைத்திருந்தார். அவர் மரணமடைந்த போது, அவரது மேசை டிராயர் ஒன்றில் அந்தக் கடிதம் காணப்பட்டது. (தகவல்கள் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் நூலில் இருந்து).

லெனின் அந்தக் கடிதத்தை எழுதியது மார்ச் 7, 1923

ஸ்டாலின் இறந்த தேதி மார்ச் 5, 1953

ஞாயிறு, 12 ஜூலை, 2020

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 2


ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தினரால் உக்ரேன் பஞ்சம் பற்றிய செய்திகள் பதிப்பிக்கப்பட்ட பின்னர், சோவியத் யூனியனில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சில அமெரிக்கப் பத்திரிகையாளர்களே அந்தத் தகவல்கள் நம்பகமானவை அல்ல என்று மறுத்தனர். ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தின் மாஸ்கோ செய்தியாளராக இருந்த லிண்ட்சே பேரட் என்ற அமெரிக்கர், 1934ஆம் ஆண்டு உக்ரேனுக்கு நேரடியாகச் சென்ற போது பஞ்சத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதைக் கண்டார். இதைப் பற்றிக் குறிப்பிடும் ‘தி நேஷன்’ என்ற மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையின் செய்தியாளரான லூயி ஃபிஷர் என்பவர் ஹெர்ஸ்ட் நிறுவனங்களும் நாஜிக்களும் மிக நெருக்கமாக செயல்படத் தொடங்கி உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.


இந்தப் பஞ்சத்திற்குச் சான்றாக பட்டினியால் உருக்குலைந்தவர்கள் என்று அந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு சிறுமி மற்றும் அவளது இளைய சகோதரன் ஆகியோரது புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டது. மற்றொரு புகைப்படம் முதலாம் உலகப் போரின் எடுக்கப்பட்டது என்பதும் பின்னர் நிரூபிக்கப்பட்டது. அந்தக் கட்டுரைகளை எழுதிய வால்கர் (Walker) (அவரது பெயரும் போலிப் பெயரே) தான் உக்ரேனில் கால்வைக்கவே இல்லை என்பதையும் பின்னர் ஒப்புக் கொண்டார். உக்ரேன் பஞ்சம் குறித்த முதலாவது “சான்றுகள்” இப்படித் தான் உருவாக்கப் பட்டன.

 

இது குறித்து இன்னொரு கட்டுரையை எழுதிய ஃபிரெட் பீல் (Fred Beal) என்பவர் சில காலம் உக்ரேனில் பணியாற்றியவர். பின்னர் அவருடன் உக்ரேனில் பணியாற்றிய சக ஊழியர்களே அவரது கட்டுரையில் கூறப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்பதை முற்றிலுமாக அம்பலப்படுத்தினர். மற்றவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் இத்தகைய தகவல்களைப் பெற்றதாக அவர் கூறிய அதே சமயம், அவருக்கு எந்த அளவுக்கு ரஷ்ய மற்றும் உக்ரேனிய மொழிகள் தெரியும் என்பதே கேள்விக்குறியாக இருந்தது!

 

உக்ரேன் பஞ்சம் குறித்த தகவல்களை அளித்தவர்கள் இது போன்ற “நிபுணர்கள்” ஆகவே இருந்தனர். மேலும் பலர் இட்லரின் நாஜி அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

 

1935ஆம் ஆண்டு ருஷ்யாவில் மனித வாழ்க்கை என்ற பெயரில் டாக்டர் எவால்டு என்பவர் எழுதிய புத்தகம் இத்தகைய செய்திகளைக் கொண்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் டாக்டர் டில்டோஃப் என்பவருடையவை ஆக இருந்தன. 1933 கோடைக்காலத்தில் இந்தப் படங்களைத் தான் எடுத்ததாக அவர் கூறினார். ஆனால் உண்மையில் அந்தச் சமயத்தில் அவர் நாஜி அரசின் விவசாயத் துறையில் பணியாற்றி வந்தார்! மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் வெளியிட்ட இரண்டு சிறுவர்களின் புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ருஷ்யப் பஞ்சம் பற்றிய ஆவணப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டது.  இது போன்ற பித்தலாட்டங்களைப் பட்டியலிட்டால் அது மிக நீளமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

நாஜிக் கட்டுப்பாட்டில் செயல்பட்ட கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிய நிகோலஸ் பிரைசோத்கோ (நாஜிப் படைகள் பின்வாங்கிச் செல்லும் போது இவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்), நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரேனில் விவசாயத்தை மறுசீரமைக்குமாறு பணிக்கப்பட்ட ஒட்டோ ஷில்லர் போன்றவர்கள் உக்ரேன் பஞ்சம் பற்றிய தகவல்களை அளிப்பதில் பங்காற்றிய இதர கூட்டாளிகள் ஆவர்.

 

1934ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் உக்ரேன் பஞ்சம் பற்றிக் குறிப்பிட்ட எவால்டு அமண்டே என்பவர் சுமார் 75 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார். கீவ் நகரத் தெருக்களில் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள் என்றார் அவர். அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு அதே பத்திரிகைக்குக் கடிதம் எழுதிய அதன் மற்றொரு செய்தியாளர் ஹரோல்டு டென்னி என்பவர் எவால்டு அமண்டே குறிப்பிட்ட அதே சமயத்தில் தான் அங்கு இருந்ததாகவும், கீவ் நகரத்தில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கூடப் பட்டினி நிலவவில்லை, யாரும் சாகவில்லை. வெளிச்சந்தையில் எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன, போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன, மக்கள் சிரித்து மகிழ்வாக இருக்கிறார்கள் என்றார்.

 

உண்மை இப்படி இருக்க, இந்தப் பஞ்சம் குறித்த பல கட்டுரைகளுக்குச் சான்றுகள் எதுவும் அளிக்கப்படவே இல்லை, சில கட்டுரைகளோ செய்தியாளர்கள் கேள்விப்பட்டதாகச் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டன, அவை பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகவே இருந்தன. உக்ரேன் பஞ்சம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த லுடு மார்டன்ஸ் (Ludu Martens), தனது நூலில் இது போன்ற பல அயோக்கியத் தனங்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.

 

1940 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செனட்டர் மெக்கார்த்தி போன்றவர்கள் காலத்திலும், பின்னர் 1980ஆம் ஆண்டுகளில் அதிபர் ரீகன் காலத்திலும் இந்தக் குற்றச்சாட்டுகள், இதே போலியான “சான்றுகள்” மற்றும் இதை விட அபத்தமான “சான்றுகள்” ஆகியவற்றின் துணையுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டன.

 

உக்ரேன் பஞ்சத்தைக் கருவாக வைத்து Harvest of Despait என்ற படம் எடுக்கப்பட்டது, பின்னர் அதன் அடிப்படையில் ஒரு புத்தகமும் வெளியிடப் பட்டது. இவற்றில் உக்ரேன் படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சி என்ற பெயரில் கூறியவர்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களும் அவருக்குத் துணையாக நின்றவர்களும் தான். மேலும் இந்தப் படத்தில் ஜார் ஆட்சிக் காலத்திலும், இரண்டாம் உலகப் போரின் போதும் எடுக்கப்பட்ட காட்சிகள் உக்ரேன் பஞ்சம் பற்றிய காட்சிகளாக இணைக்கப் பட்டிருந்தன. பின்னர் இவை கண்டு பிடிக்கப்பட்ட போது கடுமையான சர்ச்சையை எழுப்பின. அப்போது, இந்தப் படத்திற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட மார்கோ கரின்னிக் என்பவர் இதில் பயன்படுத்தப் பட்ட காட்சிகள் 1932-33ஆம் ஆண்டுக்கால உக்ரேன் பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை ஒப்புக் கொண்டார். மேலும் இத்தகைய பிழைகளை ஏற்க முடியாது என்று தான் கூறிய போதிலும் தனது கருத்து புறக்கணிக்கப் பட்டது என்றும் அவர் கூறினார்.

 

இப்படியான பொய்யான கட்டுக்கதைகளைத் தவிர நம்பத்தகுந்த, உண்மையான, ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகுந்த சான்றுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உக்ரேன் பஞ்சம் என்பது நாஜிக்கள் திட்டமிட்ட முறையில் துவக்கி வைத்த, வெறித்தனமாக முன்னெடுத்த போர்க்காலப் பொய்ப் பிரச்சாரம் ஆகும். நாஜிக்களின் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் விசுவாசமிக்க அடிமைகளும் அதனை இன்று வரையில் அதே போலிச் “சான்றுகள்” அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றனர். நாஜிக்களுக்கும் அவர்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருந்தது, அது சோவியத் யூனியனையும் தோழர் ஸ்டாலினையும் அவதூறு செய்வது. மட்டுமே ஆகும்.

 

மேற்கண்ட “சான்றுகள்” தெளிவுபடுத்துவது ஒன்றை மட்டுமே. அதாவது, இந்தச் சான்றுகள் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றவை, அல்லது வேறொரு வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக நடந்த உயிரிழப்புகளைத் திட்டமிட்டு திரித்துக் கூறப்பட்டவை, முற்றிலும் கற்பனையான “சான்றுகளை” அடிப்படையாகக் கொண்டவை, அல்லது உண்மைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சமும் அறிவியல் தன்மையற்ற முறையில் மனம் போன போக்கில் செய்யப்பட்ட கணிப்புகளை உண்மை என்ற பெயரில் முன்வைப்பவை ஆகும். இவை ஒவ்வொன்றுமே அடிப்படை நேர்மையற்ற மோசமான அரசியல் பித்தலாட்டங்கள் மட்டுமே என்பதை வலியுறுத்திச் சொல்லத் தேவையே இல்லை.

 

இன்று வரையில் உக்ரேன் பஞ்சம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இத்தகைய சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை ஆகவே உள்ளன என்பது மிகக் கேவலமான உண்மை ஆகும்.

 

அன்றைய நாஜி அரசு, அதன் பிரச்சார இயந்திரம் மற்றும் சர்வதேச கம்யூனிச எதிர்ப்பு சக்திகளே இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்ட அனைவரையும் இணைக்கும் பொதுவான கண்ணியாக இருந்தது என்பதைப் பல சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

 

1926ஆம் ஆண்டு இட்லர் தான் எழுதிய ‘எனது போராட்டம்’ (Mein Kampf) என்ற நூலில் உக்ரேனை ஜெர்மானியர்களின் வாழும் இடம் (`lebensraum') என்று குறிப்பிட்டான். உக்ரேனைக் கைப்பற்றுவதும் அதைத் தான் உருவாக்க நினைத்த ஆரியப்பேரரசின் திட்டமிட்ட குடியேற்றப் பகுதி ஆக மாற்றுவதுமே அவனது முக்கியக் கனவாக இருந்தது. 1900ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே ஜெர்மன் ஆளும் வர்க்கத்தின் கனவாக இருந்த இந்தக் கோட்பாடு, கிழக்கு ஐரோப்பா முழுவதையும் ஜெர்மனியின் காலனியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதை மோசமான வன்முறை மூலம் நடைமுறைப்படுத்த நாஜிக்கள் முயற்சித்தனர்.

 

ஆனால் 1917ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உருவான பிறகு, அதனை ஒழிக்காமல் தங்களது இந்தக் கனவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்போதைய ஜெர்மன் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இருப்பினும் தங்கள் கனவை அவர்கள் கைவிட்டு விடவில்லை. அதன் தொடர்ச்சியாக இட்லரின் நாஜிக் கூட்டம், சோவியத் யூனியனை வீழ்த்துவதைத் தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. நாஜிக்கள் எப்போதுமே பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது நோக்கத்தின் பெரும்பகுதியை நிறைவேற்றிக் கொள்வதை ஒரு வெற்றிகரமான உத்தியாகவே கையாண்டு வந்தனர் என்பது வரலாறு. எனவே, அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாக 1934-35ஆம் ஆண்டுகளில் தாங்கள் கைப்பற்ற எண்ணிய உக்ரேன் பகுதிகளில் போல்ஷிவிக்குகள் நடத்திய ‘இனப்படுகொலை’ (genocide) குறித்த பொய்ப் பிரச்சாரத்தைத் துவக்கினர். “உக்ரைனின் திட்டமிட்ட 'விடுதலை'க்கு மக்களின் மனதைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது…… இந்தப் பொய் அதை உருவாக்கிய நாஜிக்களின் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவின் ஆயுதமாக மாறியது……இப்படித் தான் ஸ்டாலினால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றிய புனைகதைகள் உருவாகின” என்று லுடு மார்டன்ஸ் சரியாகவே குறிப்பிடுகிறார் (Ludu Martens, Another view of Stalin).

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டன? முதலாவதாக, உக்ரேனைக் கைப்பற்றும் தனது செயல்திட்டத்திற்கு முன் தயாரிப்பு ஆக நாஜிக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு சோவியத் யூனியன் திட்டமிட்ட படுகொலைகள் நடத்தி வருவதாகச் சித்தரித்து, உக்ரேனைக் காக்க வந்த காவலர்கள் என்று தம்மைச் சித்தரித்துக் கொள்வது அவர்களது நோக்கமாக இருந்தது. அதன் மூலம் தனக்கு எதிரான எதிர்ப்புகளைக் கணிசமாகக் குறைத்து முனை மழுங்கச் செய்து விடலாம் என்று நாஜிக்கள் நம்பினர். இரண்டாவதாக, இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சி, தோழர் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிரான மனஉணர்வைத் தூண்டுவதற்கு அவர்கள் முயற்சித்தனர். மூன்றாவதாக, தாங்கள் நிகழ்த்திய மற்றும் இன்னும் நிகழ்த்தவிருக்கும் திட்டமிட்ட படுகொலைகள் குறித்த வெகுஜன கொந்தளிப்பு உணர்வை இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகள் வெகுவாகத் தணித்து விடும் என்று நாஜிக்கள் நம்பினர். இறுதியாக, இத்தகைய படுகொலைகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் யூனியன் மீது பழி சுமத்தி, அதன் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்று உறுதியாக நம்பினர்.


உக்ரேன் பஞ்சம், படுகொலை, இனப்படுகொலை என்று ஏகாதிபத்தியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் முன்வைக்கும் அவதூறுகளின் உண்மைப் பின்புலம் இப்படிப் பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த அவதூறுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சோவியத் யூனியன் மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்பவர்கள் அரசியல் நோக்கங்கள் ஆய்வுக்குறியவை ஆகும்.


 

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 1


 

1932-33ஆம் ஆண்டுகளில் அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரேனில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்தப் பஞ்சம் காரணமாக சுமார் 55 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று மேற்குலகப் பத்திரிகைகள் மற்றும் சோவியத் எதிர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். சிலர் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்று கூறினர், இன்னும் சிலரோ உயிரிழந்தவர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் என்று கூறினர். அப்போதைய உக்ரேன் மொத்த மக்கள் தொகையே இரண்டரை கோடி மட்டுமே என்பதைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படவில்லை! இத்தகைய உயிரிழப்புகளுக்கு சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், சோவியத் அரசும் - குறிப்பாக தோழர் ஸ்டாலினும் - காரணம் என்று ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அவர்களது அடிவருடிகளும் குற்றம் சாட்டினர். இன்னும் சொல்லப் போனால், இந்தப் பஞ்சமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் என்பது போலவும் சித்தரித்தனர். இந்தக் கருத்தை வலுவாக நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக இதற்கு பஞ்சப் படுகொலை (famine-genocide) என்றே பெயரிடப்பட்டது, இனப்படுகொலை என்றும் கூட அது குறிப்பிடப்பட்டது. இதற்கு தோழர் ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் நேரடியாகத் குற்றம் சாட்டுவதும் நடைபெற்றது. 1930ஆம் ஆண்டுகள் முதல், டிராட்ஸ்கியவாதிகளும், தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் சில ஸ்டாலின் எதிர்ப்பாளர்களும் கூடக் கிளிப்பிள்ளை போல இத்தகைய குற்றச்சாட்டுகளைத் திரும்பச் சொல்லி வருவதைக் காணலாம்.  தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் இன்று வரையிலும் கூட இது முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இது பற்றிய உண்மை நிலை என்ன? உண்மையில் அங்கு என்ன தான் நடைபெற்றது என்பதை அறிய வேண்டுமானால் விரிவாக இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

 

இதனைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன்னர், அப்போது நிலவிய சர்வதேச அரசியல் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிவது அவசியமாகிறது. அப்போது தான் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கும்.  ஸ்வீடன் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான மரியோ சௌசா என்பவர் எழுதிய ‘சோவியத் வரலாறு குறித்த கட்டுக்கதைகள்’ (Lies concerning the History of Soviet Union) என்ற கட்டுரையில் இச்சூழல் குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 

ஹிட்லர் முதல் ஹெர்ஸ்ட், கான்குவெஸ்ட், சோல்னிட்சின் வரை தொடர்கிற ஒரு நேரடி வரலாற்று இணைப்பு உள்ளது. 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அடுத்த பல தசாப்தங்கள் வரை உலக வரலாற்றில் தனது அடையாளத்தை விட்டுச் சென்றது. ஜனவரி 30 அன்று ஹிட்லர் ஜெர்மன் பிரதமர் ஆனான், வன்முறை மற்றும் சட்டத்தை மதியாத ஒரு புதிய அரசாங்கம் வடிவம் பெறத் தொடங்கியது. ஆட்சி அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்துவதற்காக, நாஜிக்கள் மார்ச் 5 ஆம் தேதியன்று புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர், வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற அனைத்துப் பிரச்சார வழிமுறைகளையும் பயன்படுத்தினர். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அதாவது பிப்ரவரி 27 அன்று, நாஜிக்கள் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு தீ வைத்தனர், அதற்கு கம்யூனிஸ்டுகள் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், நாஜிக்கள் 17.3 மில்லியன் வாக்குகள் பெற்றனர் அவர்களது 288 பிரதிநிதிகள் வெற்றி பெற்றனர், மொத்த வாக்குகளில் சுமார் 48% வாக்குகள் பெற்றிருந்தனர் (நவம்பரில் அவர்கள் 11.7 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்தனர், அவர்களது பிரதிநிதிகள் 196 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்). கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர், நாஜிக்கள் சமூக ஜனநாயகவாதிகளையும் தொழிற்சங்கவாதிகளையும் துன்புறுத்தத் தொடங்கினர், இடதுசாரி ஆண்கள் மற்றும் பெண்களால் முதலாவது வதை முகாம்கள் நிரம்பி வழியத் தொடங்கின. இதற்கிடையில் வலதுசாரிகள் உதவியுடன் பாராளுமன்றத்தில் இட்லரின் அதிகாரம் தொடர்ந்து வளர்ந்தது. மார்ச் 24 அன்று, ட்லர் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேறச் செய்தான், அது பாராளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமல் அடுத்த நான்கு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்வதற்கான முழுமையான அதிகாரத்தை அவனுக்கு வழங்கியது. அப்போது முதல் யூதர்களுக்கு எதிரான வெளிப்படையான துன்புறுத்தல் தொடங்கியது, கம்யூனிஸ்டுகள் மற்றும் இடது சமூக ஜனநாயகவாதிகள் ஏற்கனவே அடைத்து செய்யப்பட்டிருந்த வதை முகாம்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஜெர்மனியின் ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் 1918 சர்வதேச உடன்படிக்கைகளை கைவிட்ட ட்லர், முழுமையான அதிகாரத்தைப் பெறுவதற்கான தனது முயற்சியை முன்னெடுத்தான். ஜெர்மனியின் மறு ஆயுதமயமாக்கல் வெகு வேகமாக நடந்தது. சோவியத் யூனியனில் உயிரிழப்புகள் பற்றிய கட்டுக்கதைகளை முன்வைக்கப்படத் தொடங்கியபோது சர்வதேச அரசியல் அரங்கில் நிலவிய நிலைமை இதுதான்”. இந்த அரசியல் சூழலின் பின்புலத்தின் தான் உக்ரேன் பஞ்சம் குறித்த அவதூறுகளைக் காண வேண்டி இருக்கிறது.

 

பிப்ரவரி 18, 1935 அன்று, “சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற தலைப்பில் சிகாகோ அமெரிக்கன் என்ற அமெரிக்கச் செய்தித்தாளில் கட்டுரை ஒன்று வெளியானது. உக்ரேன் பஞ்சம் பற்றிய மேற்குலகக் கட்டுக்கதைகளின் துவக்கப்புள்ளி என்று இதனைக் கூறலாம். அந்த செய்தித்தாள் வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் என்பவருக்குச் சொந்தமானது. அமெரிக்காவில் மஞ்சள் பத்திரிகை உலகின் தந்தை என்று கருதப்பட்ட அவர், தொடர்ச்சியாகப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் தனது வருமானத்தையும் தனக்குச் சொந்தமான பத்திரிகைகளின் வாசகர் எண்ணிக்கை மற்றும் சுற்று எண்ணிக்கை (circulation) ஆகியவற்றைப் பெருக்கிக் கொள்வது அவரது யுக்தியாக இருந்தது. பரபரப்பான செய்திகள் கிடைக்காத போது அத்தகைய செய்திகளை ‘ஏற்பாடு’ செய்து வெளியிடவும் அவர் தயங்கவில்லை! என்று மரியோ சௌசா குறிப்பிட்டார்.

 

வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் 1935ஆம் ஆண்டில், 200 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு உடைய உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். 25 தினசரி செய்தித் தாள்கள், 24 வாரப் பத்திரிகைகள், 12 வானொலி நிலையங்கள் தவிர செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அவரது செய்தித்தாள்கள் தினம் 13 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின, தினசரி 40 மில்லியன் மக்கள் அவரது செய்தித்தாள்களை வாசித்தனர். அமெரிக்க மக்களில் மூன்றில் ஒருவர் அவரது செய்தித்தாள் வாசகராக இருந்தனர் என்பது பத்திரிகை உலகில் அவரது வீச்சு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும்.

 

படுபயங்கர பழமைவாதியும், கம்யூனிஸ்டு எதிர்ப்பாளரும் ஆன வில்லியம் ஹெர்ஸ்ட், 1934ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்று இட்லரைச் சந்தித்து உரையாடினார். இதை அடுத்து ஹெர்ஸ்ட் நடத்திய ‘International News Service’ நிறுவனத்திடம் இருந்து சர்வதேசச் செய்திகளைப் பெறுவதற்கு இட்லரின் நாஜி ஜெர்மனி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சோவியத் யூனியனுக்கு எதிரான மற்றும் குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை அவர் வெளியிடத் தொடங்கினார். பல சமயங்களில் இத்தகைய கட்டுரைகள் நாஜி ஜெர்மனியின் கெஸ்டபோ காவல்துறையினர் அளித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இட்லரின் பிரச்சார பீரங்கியாக இருந்த கோயபல்சின் பொய்களைச் சுமந்த கட்டுரைகளை வெளியிடவும் முயற்சித்த ஹெர்ஸ்ட் நிறுவனம், பின்னர் வாசகர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அதைத் திரும்பப் பெற வேண்டி இருந்தது. ஸ்டாலினைக் கொலைகாரர் ஆகச் சித்தரிக்கும் அவதூறுப் பிரச்சாரங்களின் துவக்கம் இப்படித் தான் இருந்தது. மனித குலம் இதுவரை கண்டிராத கொடூரக் கொலைகாரர்களின் கோயபல்சு வகைப் பொய்ப்பிரச்சாரத்தின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பகுதியே அது.

 

இந்தப் பின்னணியில் தான் சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற கட்டுரையை ஹெர்ஸ்ட் பத்திரிகை வெளியிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

இத்தகைய உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால், இதற்குச் சான்றாக முன்வைக்கப் படும் புகைப்படங்கள், “ஆய்வு”க் கட்டுரைகள், திரைப்படக் காட்சிகள், “நேரடி”ச் சாட்சியங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகும்.


  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...