ஞாயிறு, 12 ஜூலை, 2020

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 2


ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தினரால் உக்ரேன் பஞ்சம் பற்றிய செய்திகள் பதிப்பிக்கப்பட்ட பின்னர், சோவியத் யூனியனில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சில அமெரிக்கப் பத்திரிகையாளர்களே அந்தத் தகவல்கள் நம்பகமானவை அல்ல என்று மறுத்தனர். ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தின் மாஸ்கோ செய்தியாளராக இருந்த லிண்ட்சே பேரட் என்ற அமெரிக்கர், 1934ஆம் ஆண்டு உக்ரேனுக்கு நேரடியாகச் சென்ற போது பஞ்சத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதைக் கண்டார். இதைப் பற்றிக் குறிப்பிடும் ‘தி நேஷன்’ என்ற மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையின் செய்தியாளரான லூயி ஃபிஷர் என்பவர் ஹெர்ஸ்ட் நிறுவனங்களும் நாஜிக்களும் மிக நெருக்கமாக செயல்படத் தொடங்கி உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.


இந்தப் பஞ்சத்திற்குச் சான்றாக பட்டினியால் உருக்குலைந்தவர்கள் என்று அந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு சிறுமி மற்றும் அவளது இளைய சகோதரன் ஆகியோரது புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டது. மற்றொரு புகைப்படம் முதலாம் உலகப் போரின் எடுக்கப்பட்டது என்பதும் பின்னர் நிரூபிக்கப்பட்டது. அந்தக் கட்டுரைகளை எழுதிய வால்கர் (Walker) (அவரது பெயரும் போலிப் பெயரே) தான் உக்ரேனில் கால்வைக்கவே இல்லை என்பதையும் பின்னர் ஒப்புக் கொண்டார். உக்ரேன் பஞ்சம் குறித்த முதலாவது “சான்றுகள்” இப்படித் தான் உருவாக்கப் பட்டன.

 

இது குறித்து இன்னொரு கட்டுரையை எழுதிய ஃபிரெட் பீல் (Fred Beal) என்பவர் சில காலம் உக்ரேனில் பணியாற்றியவர். பின்னர் அவருடன் உக்ரேனில் பணியாற்றிய சக ஊழியர்களே அவரது கட்டுரையில் கூறப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்பதை முற்றிலுமாக அம்பலப்படுத்தினர். மற்றவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் இத்தகைய தகவல்களைப் பெற்றதாக அவர் கூறிய அதே சமயம், அவருக்கு எந்த அளவுக்கு ரஷ்ய மற்றும் உக்ரேனிய மொழிகள் தெரியும் என்பதே கேள்விக்குறியாக இருந்தது!

 

உக்ரேன் பஞ்சம் குறித்த தகவல்களை அளித்தவர்கள் இது போன்ற “நிபுணர்கள்” ஆகவே இருந்தனர். மேலும் பலர் இட்லரின் நாஜி அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

 

1935ஆம் ஆண்டு ருஷ்யாவில் மனித வாழ்க்கை என்ற பெயரில் டாக்டர் எவால்டு என்பவர் எழுதிய புத்தகம் இத்தகைய செய்திகளைக் கொண்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் டாக்டர் டில்டோஃப் என்பவருடையவை ஆக இருந்தன. 1933 கோடைக்காலத்தில் இந்தப் படங்களைத் தான் எடுத்ததாக அவர் கூறினார். ஆனால் உண்மையில் அந்தச் சமயத்தில் அவர் நாஜி அரசின் விவசாயத் துறையில் பணியாற்றி வந்தார்! மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் வெளியிட்ட இரண்டு சிறுவர்களின் புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ருஷ்யப் பஞ்சம் பற்றிய ஆவணப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டது.  இது போன்ற பித்தலாட்டங்களைப் பட்டியலிட்டால் அது மிக நீளமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

நாஜிக் கட்டுப்பாட்டில் செயல்பட்ட கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிய நிகோலஸ் பிரைசோத்கோ (நாஜிப் படைகள் பின்வாங்கிச் செல்லும் போது இவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்), நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரேனில் விவசாயத்தை மறுசீரமைக்குமாறு பணிக்கப்பட்ட ஒட்டோ ஷில்லர் போன்றவர்கள் உக்ரேன் பஞ்சம் பற்றிய தகவல்களை அளிப்பதில் பங்காற்றிய இதர கூட்டாளிகள் ஆவர்.

 

1934ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் உக்ரேன் பஞ்சம் பற்றிக் குறிப்பிட்ட எவால்டு அமண்டே என்பவர் சுமார் 75 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார். கீவ் நகரத் தெருக்களில் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள் என்றார் அவர். அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு அதே பத்திரிகைக்குக் கடிதம் எழுதிய அதன் மற்றொரு செய்தியாளர் ஹரோல்டு டென்னி என்பவர் எவால்டு அமண்டே குறிப்பிட்ட அதே சமயத்தில் தான் அங்கு இருந்ததாகவும், கீவ் நகரத்தில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கூடப் பட்டினி நிலவவில்லை, யாரும் சாகவில்லை. வெளிச்சந்தையில் எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன, போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன, மக்கள் சிரித்து மகிழ்வாக இருக்கிறார்கள் என்றார்.

 

உண்மை இப்படி இருக்க, இந்தப் பஞ்சம் குறித்த பல கட்டுரைகளுக்குச் சான்றுகள் எதுவும் அளிக்கப்படவே இல்லை, சில கட்டுரைகளோ செய்தியாளர்கள் கேள்விப்பட்டதாகச் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டன, அவை பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகவே இருந்தன. உக்ரேன் பஞ்சம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த லுடு மார்டன்ஸ் (Ludu Martens), தனது நூலில் இது போன்ற பல அயோக்கியத் தனங்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.

 

1940 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செனட்டர் மெக்கார்த்தி போன்றவர்கள் காலத்திலும், பின்னர் 1980ஆம் ஆண்டுகளில் அதிபர் ரீகன் காலத்திலும் இந்தக் குற்றச்சாட்டுகள், இதே போலியான “சான்றுகள்” மற்றும் இதை விட அபத்தமான “சான்றுகள்” ஆகியவற்றின் துணையுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டன.

 

உக்ரேன் பஞ்சத்தைக் கருவாக வைத்து Harvest of Despait என்ற படம் எடுக்கப்பட்டது, பின்னர் அதன் அடிப்படையில் ஒரு புத்தகமும் வெளியிடப் பட்டது. இவற்றில் உக்ரேன் படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சி என்ற பெயரில் கூறியவர்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களும் அவருக்குத் துணையாக நின்றவர்களும் தான். மேலும் இந்தப் படத்தில் ஜார் ஆட்சிக் காலத்திலும், இரண்டாம் உலகப் போரின் போதும் எடுக்கப்பட்ட காட்சிகள் உக்ரேன் பஞ்சம் பற்றிய காட்சிகளாக இணைக்கப் பட்டிருந்தன. பின்னர் இவை கண்டு பிடிக்கப்பட்ட போது கடுமையான சர்ச்சையை எழுப்பின. அப்போது, இந்தப் படத்திற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட மார்கோ கரின்னிக் என்பவர் இதில் பயன்படுத்தப் பட்ட காட்சிகள் 1932-33ஆம் ஆண்டுக்கால உக்ரேன் பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை ஒப்புக் கொண்டார். மேலும் இத்தகைய பிழைகளை ஏற்க முடியாது என்று தான் கூறிய போதிலும் தனது கருத்து புறக்கணிக்கப் பட்டது என்றும் அவர் கூறினார்.

 

இப்படியான பொய்யான கட்டுக்கதைகளைத் தவிர நம்பத்தகுந்த, உண்மையான, ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகுந்த சான்றுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உக்ரேன் பஞ்சம் என்பது நாஜிக்கள் திட்டமிட்ட முறையில் துவக்கி வைத்த, வெறித்தனமாக முன்னெடுத்த போர்க்காலப் பொய்ப் பிரச்சாரம் ஆகும். நாஜிக்களின் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் விசுவாசமிக்க அடிமைகளும் அதனை இன்று வரையில் அதே போலிச் “சான்றுகள்” அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றனர். நாஜிக்களுக்கும் அவர்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருந்தது, அது சோவியத் யூனியனையும் தோழர் ஸ்டாலினையும் அவதூறு செய்வது. மட்டுமே ஆகும்.

 

மேற்கண்ட “சான்றுகள்” தெளிவுபடுத்துவது ஒன்றை மட்டுமே. அதாவது, இந்தச் சான்றுகள் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றவை, அல்லது வேறொரு வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக நடந்த உயிரிழப்புகளைத் திட்டமிட்டு திரித்துக் கூறப்பட்டவை, முற்றிலும் கற்பனையான “சான்றுகளை” அடிப்படையாகக் கொண்டவை, அல்லது உண்மைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சமும் அறிவியல் தன்மையற்ற முறையில் மனம் போன போக்கில் செய்யப்பட்ட கணிப்புகளை உண்மை என்ற பெயரில் முன்வைப்பவை ஆகும். இவை ஒவ்வொன்றுமே அடிப்படை நேர்மையற்ற மோசமான அரசியல் பித்தலாட்டங்கள் மட்டுமே என்பதை வலியுறுத்திச் சொல்லத் தேவையே இல்லை.

 

இன்று வரையில் உக்ரேன் பஞ்சம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இத்தகைய சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை ஆகவே உள்ளன என்பது மிகக் கேவலமான உண்மை ஆகும்.

 

அன்றைய நாஜி அரசு, அதன் பிரச்சார இயந்திரம் மற்றும் சர்வதேச கம்யூனிச எதிர்ப்பு சக்திகளே இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்ட அனைவரையும் இணைக்கும் பொதுவான கண்ணியாக இருந்தது என்பதைப் பல சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

 

1926ஆம் ஆண்டு இட்லர் தான் எழுதிய ‘எனது போராட்டம்’ (Mein Kampf) என்ற நூலில் உக்ரேனை ஜெர்மானியர்களின் வாழும் இடம் (`lebensraum') என்று குறிப்பிட்டான். உக்ரேனைக் கைப்பற்றுவதும் அதைத் தான் உருவாக்க நினைத்த ஆரியப்பேரரசின் திட்டமிட்ட குடியேற்றப் பகுதி ஆக மாற்றுவதுமே அவனது முக்கியக் கனவாக இருந்தது. 1900ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே ஜெர்மன் ஆளும் வர்க்கத்தின் கனவாக இருந்த இந்தக் கோட்பாடு, கிழக்கு ஐரோப்பா முழுவதையும் ஜெர்மனியின் காலனியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதை மோசமான வன்முறை மூலம் நடைமுறைப்படுத்த நாஜிக்கள் முயற்சித்தனர்.

 

ஆனால் 1917ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உருவான பிறகு, அதனை ஒழிக்காமல் தங்களது இந்தக் கனவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்போதைய ஜெர்மன் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இருப்பினும் தங்கள் கனவை அவர்கள் கைவிட்டு விடவில்லை. அதன் தொடர்ச்சியாக இட்லரின் நாஜிக் கூட்டம், சோவியத் யூனியனை வீழ்த்துவதைத் தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. நாஜிக்கள் எப்போதுமே பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது நோக்கத்தின் பெரும்பகுதியை நிறைவேற்றிக் கொள்வதை ஒரு வெற்றிகரமான உத்தியாகவே கையாண்டு வந்தனர் என்பது வரலாறு. எனவே, அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாக 1934-35ஆம் ஆண்டுகளில் தாங்கள் கைப்பற்ற எண்ணிய உக்ரேன் பகுதிகளில் போல்ஷிவிக்குகள் நடத்திய ‘இனப்படுகொலை’ (genocide) குறித்த பொய்ப் பிரச்சாரத்தைத் துவக்கினர். “உக்ரைனின் திட்டமிட்ட 'விடுதலை'க்கு மக்களின் மனதைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது…… இந்தப் பொய் அதை உருவாக்கிய நாஜிக்களின் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவின் ஆயுதமாக மாறியது……இப்படித் தான் ஸ்டாலினால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றிய புனைகதைகள் உருவாகின” என்று லுடு மார்டன்ஸ் சரியாகவே குறிப்பிடுகிறார் (Ludu Martens, Another view of Stalin).

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டன? முதலாவதாக, உக்ரேனைக் கைப்பற்றும் தனது செயல்திட்டத்திற்கு முன் தயாரிப்பு ஆக நாஜிக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு சோவியத் யூனியன் திட்டமிட்ட படுகொலைகள் நடத்தி வருவதாகச் சித்தரித்து, உக்ரேனைக் காக்க வந்த காவலர்கள் என்று தம்மைச் சித்தரித்துக் கொள்வது அவர்களது நோக்கமாக இருந்தது. அதன் மூலம் தனக்கு எதிரான எதிர்ப்புகளைக் கணிசமாகக் குறைத்து முனை மழுங்கச் செய்து விடலாம் என்று நாஜிக்கள் நம்பினர். இரண்டாவதாக, இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சி, தோழர் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிரான மனஉணர்வைத் தூண்டுவதற்கு அவர்கள் முயற்சித்தனர். மூன்றாவதாக, தாங்கள் நிகழ்த்திய மற்றும் இன்னும் நிகழ்த்தவிருக்கும் திட்டமிட்ட படுகொலைகள் குறித்த வெகுஜன கொந்தளிப்பு உணர்வை இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகள் வெகுவாகத் தணித்து விடும் என்று நாஜிக்கள் நம்பினர். இறுதியாக, இத்தகைய படுகொலைகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் யூனியன் மீது பழி சுமத்தி, அதன் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்று உறுதியாக நம்பினர்.


உக்ரேன் பஞ்சம், படுகொலை, இனப்படுகொலை என்று ஏகாதிபத்தியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் முன்வைக்கும் அவதூறுகளின் உண்மைப் பின்புலம் இப்படிப் பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த அவதூறுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சோவியத் யூனியன் மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்பவர்கள் அரசியல் நோக்கங்கள் ஆய்வுக்குறியவை ஆகும்.


 

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 1


 

1932-33ஆம் ஆண்டுகளில் அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரேனில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்தப் பஞ்சம் காரணமாக சுமார் 55 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று மேற்குலகப் பத்திரிகைகள் மற்றும் சோவியத் எதிர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். சிலர் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்று கூறினர், இன்னும் சிலரோ உயிரிழந்தவர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் என்று கூறினர். அப்போதைய உக்ரேன் மொத்த மக்கள் தொகையே இரண்டரை கோடி மட்டுமே என்பதைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படவில்லை! இத்தகைய உயிரிழப்புகளுக்கு சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், சோவியத் அரசும் - குறிப்பாக தோழர் ஸ்டாலினும் - காரணம் என்று ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அவர்களது அடிவருடிகளும் குற்றம் சாட்டினர். இன்னும் சொல்லப் போனால், இந்தப் பஞ்சமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் என்பது போலவும் சித்தரித்தனர். இந்தக் கருத்தை வலுவாக நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக இதற்கு பஞ்சப் படுகொலை (famine-genocide) என்றே பெயரிடப்பட்டது, இனப்படுகொலை என்றும் கூட அது குறிப்பிடப்பட்டது. இதற்கு தோழர் ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் நேரடியாகத் குற்றம் சாட்டுவதும் நடைபெற்றது. 1930ஆம் ஆண்டுகள் முதல், டிராட்ஸ்கியவாதிகளும், தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் சில ஸ்டாலின் எதிர்ப்பாளர்களும் கூடக் கிளிப்பிள்ளை போல இத்தகைய குற்றச்சாட்டுகளைத் திரும்பச் சொல்லி வருவதைக் காணலாம்.  தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் இன்று வரையிலும் கூட இது முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இது பற்றிய உண்மை நிலை என்ன? உண்மையில் அங்கு என்ன தான் நடைபெற்றது என்பதை அறிய வேண்டுமானால் விரிவாக இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

 

இதனைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன்னர், அப்போது நிலவிய சர்வதேச அரசியல் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிவது அவசியமாகிறது. அப்போது தான் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கும்.  ஸ்வீடன் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான மரியோ சௌசா என்பவர் எழுதிய ‘சோவியத் வரலாறு குறித்த கட்டுக்கதைகள்’ (Lies concerning the History of Soviet Union) என்ற கட்டுரையில் இச்சூழல் குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 

ஹிட்லர் முதல் ஹெர்ஸ்ட், கான்குவெஸ்ட், சோல்னிட்சின் வரை தொடர்கிற ஒரு நேரடி வரலாற்று இணைப்பு உள்ளது. 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அடுத்த பல தசாப்தங்கள் வரை உலக வரலாற்றில் தனது அடையாளத்தை விட்டுச் சென்றது. ஜனவரி 30 அன்று ஹிட்லர் ஜெர்மன் பிரதமர் ஆனான், வன்முறை மற்றும் சட்டத்தை மதியாத ஒரு புதிய அரசாங்கம் வடிவம் பெறத் தொடங்கியது. ஆட்சி அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்துவதற்காக, நாஜிக்கள் மார்ச் 5 ஆம் தேதியன்று புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர், வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற அனைத்துப் பிரச்சார வழிமுறைகளையும் பயன்படுத்தினர். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அதாவது பிப்ரவரி 27 அன்று, நாஜிக்கள் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு தீ வைத்தனர், அதற்கு கம்யூனிஸ்டுகள் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், நாஜிக்கள் 17.3 மில்லியன் வாக்குகள் பெற்றனர் அவர்களது 288 பிரதிநிதிகள் வெற்றி பெற்றனர், மொத்த வாக்குகளில் சுமார் 48% வாக்குகள் பெற்றிருந்தனர் (நவம்பரில் அவர்கள் 11.7 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்தனர், அவர்களது பிரதிநிதிகள் 196 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்). கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர், நாஜிக்கள் சமூக ஜனநாயகவாதிகளையும் தொழிற்சங்கவாதிகளையும் துன்புறுத்தத் தொடங்கினர், இடதுசாரி ஆண்கள் மற்றும் பெண்களால் முதலாவது வதை முகாம்கள் நிரம்பி வழியத் தொடங்கின. இதற்கிடையில் வலதுசாரிகள் உதவியுடன் பாராளுமன்றத்தில் இட்லரின் அதிகாரம் தொடர்ந்து வளர்ந்தது. மார்ச் 24 அன்று, ட்லர் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேறச் செய்தான், அது பாராளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமல் அடுத்த நான்கு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்வதற்கான முழுமையான அதிகாரத்தை அவனுக்கு வழங்கியது. அப்போது முதல் யூதர்களுக்கு எதிரான வெளிப்படையான துன்புறுத்தல் தொடங்கியது, கம்யூனிஸ்டுகள் மற்றும் இடது சமூக ஜனநாயகவாதிகள் ஏற்கனவே அடைத்து செய்யப்பட்டிருந்த வதை முகாம்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஜெர்மனியின் ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் 1918 சர்வதேச உடன்படிக்கைகளை கைவிட்ட ட்லர், முழுமையான அதிகாரத்தைப் பெறுவதற்கான தனது முயற்சியை முன்னெடுத்தான். ஜெர்மனியின் மறு ஆயுதமயமாக்கல் வெகு வேகமாக நடந்தது. சோவியத் யூனியனில் உயிரிழப்புகள் பற்றிய கட்டுக்கதைகளை முன்வைக்கப்படத் தொடங்கியபோது சர்வதேச அரசியல் அரங்கில் நிலவிய நிலைமை இதுதான்”. இந்த அரசியல் சூழலின் பின்புலத்தின் தான் உக்ரேன் பஞ்சம் குறித்த அவதூறுகளைக் காண வேண்டி இருக்கிறது.

 

பிப்ரவரி 18, 1935 அன்று, “சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற தலைப்பில் சிகாகோ அமெரிக்கன் என்ற அமெரிக்கச் செய்தித்தாளில் கட்டுரை ஒன்று வெளியானது. உக்ரேன் பஞ்சம் பற்றிய மேற்குலகக் கட்டுக்கதைகளின் துவக்கப்புள்ளி என்று இதனைக் கூறலாம். அந்த செய்தித்தாள் வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் என்பவருக்குச் சொந்தமானது. அமெரிக்காவில் மஞ்சள் பத்திரிகை உலகின் தந்தை என்று கருதப்பட்ட அவர், தொடர்ச்சியாகப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் தனது வருமானத்தையும் தனக்குச் சொந்தமான பத்திரிகைகளின் வாசகர் எண்ணிக்கை மற்றும் சுற்று எண்ணிக்கை (circulation) ஆகியவற்றைப் பெருக்கிக் கொள்வது அவரது யுக்தியாக இருந்தது. பரபரப்பான செய்திகள் கிடைக்காத போது அத்தகைய செய்திகளை ‘ஏற்பாடு’ செய்து வெளியிடவும் அவர் தயங்கவில்லை! என்று மரியோ சௌசா குறிப்பிட்டார்.

 

வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் 1935ஆம் ஆண்டில், 200 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு உடைய உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். 25 தினசரி செய்தித் தாள்கள், 24 வாரப் பத்திரிகைகள், 12 வானொலி நிலையங்கள் தவிர செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அவரது செய்தித்தாள்கள் தினம் 13 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின, தினசரி 40 மில்லியன் மக்கள் அவரது செய்தித்தாள்களை வாசித்தனர். அமெரிக்க மக்களில் மூன்றில் ஒருவர் அவரது செய்தித்தாள் வாசகராக இருந்தனர் என்பது பத்திரிகை உலகில் அவரது வீச்சு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும்.

 

படுபயங்கர பழமைவாதியும், கம்யூனிஸ்டு எதிர்ப்பாளரும் ஆன வில்லியம் ஹெர்ஸ்ட், 1934ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்று இட்லரைச் சந்தித்து உரையாடினார். இதை அடுத்து ஹெர்ஸ்ட் நடத்திய ‘International News Service’ நிறுவனத்திடம் இருந்து சர்வதேசச் செய்திகளைப் பெறுவதற்கு இட்லரின் நாஜி ஜெர்மனி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சோவியத் யூனியனுக்கு எதிரான மற்றும் குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை அவர் வெளியிடத் தொடங்கினார். பல சமயங்களில் இத்தகைய கட்டுரைகள் நாஜி ஜெர்மனியின் கெஸ்டபோ காவல்துறையினர் அளித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இட்லரின் பிரச்சார பீரங்கியாக இருந்த கோயபல்சின் பொய்களைச் சுமந்த கட்டுரைகளை வெளியிடவும் முயற்சித்த ஹெர்ஸ்ட் நிறுவனம், பின்னர் வாசகர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அதைத் திரும்பப் பெற வேண்டி இருந்தது. ஸ்டாலினைக் கொலைகாரர் ஆகச் சித்தரிக்கும் அவதூறுப் பிரச்சாரங்களின் துவக்கம் இப்படித் தான் இருந்தது. மனித குலம் இதுவரை கண்டிராத கொடூரக் கொலைகாரர்களின் கோயபல்சு வகைப் பொய்ப்பிரச்சாரத்தின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பகுதியே அது.

 

இந்தப் பின்னணியில் தான் சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற கட்டுரையை ஹெர்ஸ்ட் பத்திரிகை வெளியிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

இத்தகைய உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால், இதற்குச் சான்றாக முன்வைக்கப் படும் புகைப்படங்கள், “ஆய்வு”க் கட்டுரைகள், திரைப்படக் காட்சிகள், “நேரடி”ச் சாட்சியங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகும்.


  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...