செவ்வாய், 25 ஜனவரி, 2022

 கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 4


இவ்வாறாக, கிரோவ் படுகொலைக்கு ஸ்டாலினைக் குற்றவாளியாக ஆக்கும் டிராட்ஸ்கிய மற்றும் மேற்குலக முதலாளித்துவவாதிகளின் வெறித்தனமான முயற்சிகள், மேற்கண்ட சாதாரண உண்மைகளின் முன்னர் மிகக் கேவலமாகத் தோற்றுப் போகின்றன. ஆனால், உண்மையில் கிரோவைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் டிராட்ஸ்கிய மற்றும் உள்நாட்டு சீர்குலைவுவாதிகளுக்கும் அவர்களது மேற்கத்திய எஜமானர்களுக்கும் தான் இருந்தது. கிரோவின் அரசியல் செயல்பாடுகளால் பாதிக்கப் பட்டவர்களாக அவர்களே இருந்தார்கள். சோவியத் யூனியனுக்கு எதிரான தங்களது கொலைகாரச் சதியின் முக்கியப் பகுதியாக, கிரோவைத் திட்டமிட்ட முறையில் கொலை செய்த அவர்கள், அதற்கான பழியையும் ஸ்டாலின் தலையில் சுமத்துவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க முடியும் என்று முட்டாள்தனமாகக் கணக்குப் போட்டனர். ஸ்டாலினின் மெய்க்காவல் படைத் தலைவராக இருந்த ஏ.டி. ரைபின், இதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்.

 

இன்று, ஸ்டாலின் இப்படிச் செய்தார், அப்படிச் செய்தார், கிரோவைக் கொலை செய்தார் என்று இன்று பலர் கூறுகிறார்கள். வாய்க்கு வந்தபடிப் பேசுவதற்கு பதிலாக வரலாறைத் திரும்பிப் பாருங்கள். 1921-ஆம் ஆண்டு முதல்போர்முனையை நேர்ப்படுத்துவதற்காக அஸ்த்ரகான் பகுதியை உள்நாட்டுப் போர்க்கால எதிரிகளிடம் விட்டுக் கொடுப்பது என்று டிராட்ஸ்கி முடிவு செய்த காலம் முதல்கிரோவ் டிராட்ஸ்கியை விமரிசனம் செய்து வந்தார் என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் லெனின் கிரோவை ஆதரித்தார், அந்தப் பகுதியில் உள்நாட்டுப் போர்க்கால எதிரிகள் தோற்கடிக்கப் பட்டனர் என்பதால் டிராட்ஸ்கி கிரோவை ஒரு போதும் மன்னிக்கவில்லை. மற்றொரு சோஷலிஸ்டு புரட்சியாளனான வாசர்மேன், கிரோவ் முடியாட்சி ஆதரவாளராக இருந்தார் என்று ஒரு வதந்தியைக் கிளப்பத் தொடங்கினான். அந்தச் சமயத்தில் கிரோவ் கைது செய்யப்பட்டார் என்றாலும் அவரது எதிரிகளால் அவரை ஒழித்துக்கட்ட முடியவில்லை. இந்த ஆத்திரமூட்டும் செயலை அம்பலப்படுத்திய விசாரணைத் தீர்ப்பாயம், வாசர்மேனுக்கு மரணதண்டனை வழங்கியது. டிராட்ஸ்கி எப்படிப்பட்ட ஒரு எதிரி என்பதையும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்த போதிலும் கிரோவ் எப்போதும் டிராட்ஸ்கியை எதிர்த்தே வந்தார். 1927-ஆம் ஆண்டுலெனின் கிராடில் எதிர்த்தரப்பு தடுப்பு அரண்கள் மூடப்பட்டு விட்டனஎன்று அவர் கூறினார். கஜகஸ்தானில் குலாக்குகளுக்கு எதிரான பயங்கரமான ஆத்திரமூட்டும் செயல்களுக்காக கிரோவ் அவர்களை விமரிசனம் செய்ததை டிராட்ஸ்கியும் தற்போது பதுங்கி இருக்கும் எதிர்த்தரப்பும், யகோடாவும் எளிதாக விட்டு விடவில்லை. கிரோவைக் கொலை செய்வதில் கொலையாளிகள் வெற்றியடைய செய்வதற்காகத்தான், கிரோவைப் பாதுகாப்பதில் அவரது மெய்க்காவலர்கள் தீவிர ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 31-32). கிரோவைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் யாருக்கு இருந்தது என்பதை மெய்க்காவலர் படைத் தலைவராக ஏ.டி. ரைபின் மிகத் தெளிவாகவே எடுத்துக்கிறார்.

 

டிராட்ஸ்கியும் அவரது அடியொற்றி மேற்குலக ஊடகங்களும் கூறுவதைப் போல, கிரோவின் இறுதிக் காலம் வரையில் அவருக்கும் ஸ்டாலினுக்கும் எந்தப் பகையுணர்வும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக, நம்பிக்கைக்கு உரிய நெருக்கத் தோழராக கிரோவ் இருந்தார் என்பதை மேற்படி நேரடிச் சான்றுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. கிரோவைக் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் ஸ்டாலினுக்கு இருக்கவில்லை என்பதை அவை தெளிவாக்குகின்றன. 

 

அவதூறாளர்களின் பொய்ப் பரப்புரைக்கு மாறாக, டிராட்ஸ்கிக்கும், அவரை அடியொற்றிப் பின்பற்றிய முதலாளித்துவ ஆதரவு சீர்குலைவு சக்திகளுக்கும் மட்டுமே கிரோவைக் கொலை செய்வதற்கான நோக்கம் (motive) இருந்தது உண்மை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதனை விரிவாகப் பேச வேண்டும்.

 

 கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 3



 

அண்மைக் காலத்தில் ரகசிய நீக்கம் செய்யப்பட்ட சோவியத் ஆவணங்கள், கிரோவ் படுகொலையில் ஸ்டாலினைத் தொடர்பு படுத்தும் முயற்சியின் பகுதியாக கூறப்பட்ட கதைகள் அனைத்தையும் பொய்யென நிரூபிக்கின்றன. இத்தகைய ரகசிய நீக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட Stalinist Terror New Perspectives என்ற நூல் ஏராளமான தகவல்களைத் தருகிறது.

 

ஆர்லோவ் என்பவர் எழுதிய Secret History of Stalins Crimes என்ற நூல் இத்தகைய அவதூறுகளுக்கு முக்கியத் தொடக்கமாக இருந்தது என்பதைப் பார்த்தோம். கோர்பசேவ் காலத்தில் நியமிக்கப்பட்ட யாகொவ்லோவ் கமிஷன், ஆர்லோவின் கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்ற முடிவுக்கு வந்தது. மேலும் “ஒரு தரப்பான, மேம்போக்கான, உறுதி செய்யப்படாத தகவல்கள், புரளிகள் மற்றும் அனுமானங்கள் ஆகியவை மட்டுமே இந்தக் கொலையில் ஸ்டாலினுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை ஆதரிக்கின்றன” என்று அந்தக் கமிஷன் முடிவு செய்தது (Stalinist Terror New Perspectives, Edited by J. Arch Getty and Roberta T Manning, Cambridge University Press, 1993, Page 47).

 

இதனை ஏற்க விரும்பாத சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மத்திய கமிட்டி அந்த அறிக்கை வெளியிடப் படாமல் தடை செய்தது என்கிறார் ஆர்ச் கெட்டி. இது போன்ற பல உண்மைகளைப் பட்டியலிடும் மேற்காண் ஆசிரியர், ஸ்டாலின் தான் கிரோவைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்ற அனுமானம் தற்போது ருஷ்யாவில் அதிகாரபூர்வமாக ஏற்கப்படுவதில்லை எனத் தெளிவுபடத் தெரிவிக்கிறார். பொலிட்பீரோ குழுவின் அறிக்கை அப்பட்டமாக அதை மறுத்து விட்டது, பாடநூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி விட்டன என்கிறார்.

 

சரியான உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டால் ஸ்டாலின் குறித்த எந்த அவதூறுகளையும் முன்வைப்பவர்கள், இப்படித் தான் அவக்கேடான முறையில் பின்வாங்க வேண்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்

பாகம் - 2



 

ஸ்டாலினின் கடுமையான கண்ணோட்டத்தையும் (hardline views) சர்வாதிகாரப் போக்கையும் கிரோவ் எதிர்த்தார் என்றும், கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகப் புதிதாகத் தோன்றி வந்த மிதவாதத் தரப்பை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார் என்றும், அதனைப் பொறுத்துக் கொள்ள விரும்பாத ஸ்டாலின் அவரைத் தீர்த்துக்கட்ட உத்திரவிட்டார் என்றும் அவதூறாளர்கள் கட்டுக்கதைகளை அடுக்கினர். கட்சியின் பதினேழாவது காங்கிரசில் கிரோவ் பலத்த கரகோஷம் மற்றும் ஆதரவைப் பெற்றார், ஸ்டாலினைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்றார், இதனால் கிரோவைத் தனக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதி என்.கே.வி.டி. அமைப்பின் உதவியுடன் கிரோவைக் கொலை செய்தார் என்றெல்லாம் கூறினர்.

 

ஆனால் ஸ்டாலினுக்கும் கிரோவுக்கும் இடையிலான உறவு உண்மையில் மிக சுமுகமானதாகவும், நெருக்கமானதாகவும் மட்டுமே இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு இருந்தது என்பதற்கு ஆணித்தரமான முதன்மைச் சான்றுகள் எதையும் அவர்களால் முன்வைக்க இயலவில்லை. ஆனால், இந்த அவதூறு வெறும் கட்டுக்கதை தான் என்பதை நிரூபிக்கவும் இருவருக்கும் இடையிலான உறவு மிகச் சுமுகமாகவும் இருந்தது என்பதை நிரூபிக்கவும் நம்மால் முதன்மைச் சான்றை முன்வைக்க முடியும். ஸ்டாலினின் மெய்க்காவலர் படைத் தலைவராக இருந்த அலெக்சி ரைபின் அவர்களை விட இது குறித்து முதன்மைச் சான்றை முன்வைக்கக் கூடியவர் வேறெவரும் இருக்க முடியாது. அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து தனது நினைவுக் குறிப்புகளில் அலெக்சி ரைபின் பின்வருமாறு கூறினார் :

 

கிரோவ் அடிக்கடி ஸ்டாலினின் இருப்பிடத்திற்கு வருவார், அவரது படுக்கையில் கூடத் தூங்குவார். அவர்கள் இருவரும் ஒன்றாக நீராவிக் குளியலும் எடுத்துக் கொள்வார்கள். பொலிட்பீரோவில் இருந்த வேறு எவருக்கும் ஸ்டாலினுடன் அத்தகைய தோழமையும் புரிதலும் இருக்கவில்லை. கிரோவ் ஒரு திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள போல்ஷிவிக் என்று ஸ்டாலின் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார். கடைசி காங்கிரசில் கிரோவ் மிகத் திறமையாகச் செயல்பட்டார், புகாரின், ஜினோவியேவ் மற்றும் கமீனவ் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், டிராட்ஸ்கி குறித்து அவர் பின்வருமாறு கூறினார், இதுபோன்ற புனிதமான ஒரு காங்கிரசில் அவரது பெயர் சொல்லப்படுவதற்காகவே அவரை மூன்று முறை தண்டிக்கலாம்” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 28).

 

ஸ்டாலினின் மெய்க்காவலர் அலெக்சி ரைபின் இது குறித்து தொடர்ந்து கூறுவதைக் கவனிப்பது அவசியம் ஆகும். “…ஜனவரி ஒன்றாம் தேதி.. அன்று மாலை தோழர் ஸ்டாலின் மற்றும் எனது கமாண்டன்ட் ஸ்மிர்னோவ், கமிசார் லியுபோவிட்ஸ்கி ஆகியோராடு நானம் கிரோவை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். ஸ்டாலின் கிரோவை ஆரத் தழுவியபடி, அவருடன் ரெட் புல்லட் என்றழைக்கப்பட்ட ரயிலின் பெட்டிக்கு உள்ளே வரை கொண்டு போய் விட்டார். டிசம்பர் 1 அன்று கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். டிசம்பர் 2 அன்று மொலடோவ் மற்றும் வொரோஷிலோவ் ஆகியோர் உடனடியாக லெனின்கிராடுக்கு விரைந்தனர். அது ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்தான காலம். எனவே, செர்ழீன்ஸ்கி தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, லெனின்கிராடுக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றது. ஸ்டாலின் மிகவும் துயரமுற்றவராக இருந்தார், அவரது முகம் கருத்துப் போயிருந்தது, அவரது முகம் துடிப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இறந்து கிடந்த கிரோவின் உதட்டில் முத்தமிட்டு, “விடை கொடுக்கிறேன் எனது இனிய நண்பனேஎன்று அழுதபடியே கூறினார் ஸ்டாலின். ஸ்டாலினின் மனைவியின் இறப்புக்குப் பின்னர், ஸ்டாலினோடு கிரோவ் அளவுக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் வேறு யாரும் கிடையாது.” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஏ.டி. ரைபின் (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 29). ஸ்டாலினுக்கும் கிரோவ்க்கும் இடையிலான உறவு பற்றிய டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவக் கட்டுக்கதைகளைத் தாண்டி, உண்மை வேறெங்கோ ஒரு தளத்தில் இருந்தது என்பதை இதை விடத் தெளிவாக யாரும் எடுத்துக் காட்டி இருக்க முடியாது. 



  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...