செவ்வாய், 25 ஜனவரி, 2022

 

கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 1




 


செர்கீ கிரோவ்.


லெனின்கிராடு பிராந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த இவர், டிசம்பர் 1, 1934 அன்று நிகோலயேவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்மோல்னியில் மூன்றாவது மாடியில் இருந்த தனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த கிரோவை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலைகாரன் நிகோலயேவ், அவர் கடந்து சென்ற பின்னர், பின்னால் சில அடி தூரத்தில் இருந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டான். தலையின் பின்பகுதியில் குண்டு பாய்ந்து கிரோவ் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

1900ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றிய கிரோவ், 1905ஆம் ஆண்டு புரட்சியில் பங்கு பெற்றுப் பல முறை ஜார் அரசால் சிறை வைக்கப்பட்டவர் ஆவார். உள்நாட்டுப் போர்க் காலத்தில் செஞ்சேனையின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்த கிரோவ், அஸ்திரகான் பகுதியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ப்புரட்சியாளர்களை ஒடுக்கினார்.  1926ஆம் ஆண்டில் டிராட்ஸ்கி-ஜினோவியேவ் கூட்டத்தால் சீர்குலைக்கப் பட்ட லெனின்கிராடு கட்சி அமைப்பைச் சரிசெய்யும் மிக முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் லெனின்கிராடு பிராந்திய கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரோவ், கம்யூனிஸ்டு கட்சியின் நம்பகமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1930ஆம் ஆண்டு கட்சி மத்தியக் கமிட்டி பொலிட்பீரோவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த ஆண்டுகளில் சோவியத் பொருளாதாரத்தை சோசலிசப் பாதையில் முன்னேற்றுவதற்காகக் கட்சி மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளாக இருந்த இயந்திர மயமாக்கல் மற்றும் கூட்டுப் பண்ணை மயமாக்கல் போன்றவற்றை முழுமையாக ஆதரித்த கிரோவ், அவற்றை வெற்றி பெறச் செய்வதற்காக முழு வேகத்தோடு பாடுபட்டார். அன்றைய சோவியத் யூனியனில் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்களில் கிரோவ் முக்கியமானவராகவும், கட்சியினரால் அதிகம் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் 17வது காங்கிரசில் மிக அதிக விருப்ப வாக்குகளைப் பெற்ற தலைவராக அவர் இருந்தார். இப்படிப் பட்ட ஒரு தலைவர் ஏன் கொல்லப்பட வேண்டும்?

 

இந்தக் கிரோவ் படுகொலை ஒரு மோசமான துன்பியல் நிகழ்வு என்பதில் எந்த ஐயமும் கிடையாது. சோவியத் கம்யூனிஸ்டு கட்சிக்கு இது ஒரு மாபெரும் இழப்பாக இருந்தது என்பதை அதன் எதிரிகள் கூட ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலைத் தலைவரை, மக்களாலும் கம்யூனிஸ்டுகளாலும் அதிகம் நேசிக்கப் பட்ட ஒரு செயல்வீரரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அத்தகைய அவசியம் யாருக்கு இருந்திருக்க முடியும்? இத்தகைய படுகொலையை அரங்கேற்றியவர்கள் அதன் மூலம் சாதிக்க நினைத்தது என்ன? இதனால் பயனடையக் கூடியதாக இருந்தவர்கள் யார்? அவரது படுகொலையால் இழப்பைச் சந்திக்கக் கூடியவர்கள் யார்? இவை எல்லாவற்றையும் விட, அவர் உயிர்வாழ்ந்த காலத்தில் யாரை எதிரியாகக் கருதினார், யாரை எதிர்த்து அதிகம் போராடினார், அவரால் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடியவர்கள் யார்? அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி யாருக்கு இருந்திருக்க முடியும்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடாமல் இது பற்றிய உண்மைகளைக் கண்டறிய முடியாது. அவரது படுகொலைக்குப் பின்னர் சோவியத் எதிரிகளும், டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவ (இரண்டுக்கும் பெரிதாக வேறுபாடுகள் எதுவும் இல்லை தான்) எடுபிடிகளும் உடனடியாகவே தங்களது அவதூறுப் பிரச்சாரத்தைத் துவக்கினர்.

 

இவ்வாறு கிரோவ் படுகொலைக்கு ஸ்டாலின் தான் காரணம் என்ற அவதூறைத் துவக்கியவர்களில் முக்கியமானவர் டிராட்ஸ்கி ஆவார். கிரோவ் படுகொலை செய்யப்பட்ட அதே 1934 டிசம்பர் மாதத்திலேயே On the Kirov Assassination என்ற கட்டுரையில் ஸ்டாலினைத் தொடர்பு படுத்த முயற்சித்தார் டிராட்ஸ்கி.

 

மேற்குலகுக்குத் தப்பியோடி சோவியத் எதிர்ப்பாளர் ஆன ஆர்லோவ் என்ற மென்ஷிவிக் நபர், கிரோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறினார். என்.கே.வி.டி அமைப்பின் அதிகாரிகளிடம் இருந்து தான் கேட்டதாகக் கூறிய கிசுகிசுச் செய்திகளையே இதற்குச் “சான்று” ஆக அவர் முன்வைத்தார்! அவர் எழுதிய Secret History of Stalins Crimes என்ற புத்தகமே இன்று வரை இது குறித்து முன்வைக்கப் படும் அனைத்துப் பொய்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.

 

பின்னர் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்கள், சோவியத் அதிருப்தியாளர்கள், முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் மற்றும் உளவுத் துறை ஏஜெண்டுகள் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை மேலும் விரிவுபடுத்தி, அதனைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகளை இணைத்து அதனைப் பூதாகாரமாக சோடித்தனர். உலகெங்கிலும் உள்ள தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களுக்குப் பிடித்த அவதூறாளர் ஆன ராபர்ட் கான்குவெஸ்டும், ஸ்டெபன் கோஹன் போன்றவர்களும் இதனை வெறித்தனமான முன்னெடுத்தனர். ஆனால் வழக்கம் போல இந்த வன்முறை நிகழ்வுடன் ஸ்டாலினைத் தொடர்பு படுத்தக் கூடிய எந்த நேரடியான சான்றுகளும் இருக்கவில்லை. ஏன், மறைமுகமாக சந்தேகத்தை எழுப்பக் கூடிய அரைகுறைச் சான்றுகள் எதையும் கூட ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கவில்லை. வழக்கம் போலவே இந்தக் குற்றச்சாட்டும், ஆதாரமற்ற அனுமானங்கள், உறுதி செய்யப்படாத கிசுகிசுக்கள் மற்றும் ஓடுகாலிகள் கூறியதாகச் சொல்லப்பட்ட செவிவழிச் செய்திகள் ஆகியவற்றை மட்டுமே சான்றாக முன்வைத்தன. 

 

ஸ்டாலினின் கடுமையான கண்ணோட்டத்தையும் (hardline views) சர்வாதிகாரப் போக்கையும் கிரோவ் எதிர்த்தார் என்றும், கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகப் புதிதாகத் தோன்றி வந்த மிதவாதத் தரப்பை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார் என்றும், அதனைப் பொறுத்துக் கொள்ள விரும்பாத ஸ்டாலின் அவரைத் தீர்த்துக்கட்ட உத்திரவிட்டார் என்றும் அவதூறாளர்கள் கட்டுக்கதைகளை அடுக்கினர். கட்சியின் பதினேழாவது காங்கிரசில் கிரோவ் பலத்த கரகோஷம் மற்றும் ஆதரவைப் பெற்றார், ஸ்டாலினைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்றார், இதனால் கிரோவைத் தனக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதி என்.கே.வி.டி. அமைப்பின் உதவியுடன் கிரோவைக் கொலை செய்தார் என்றெல்லாம் கூறினர்.

 

ஆனால் ஸ்டாலினுக்கும் கிரோவுக்கும் இடையிலான உறவு உண்மையில் மிக சுமுகமானதாகவும், நெருக்கமானதாகவும் மட்டுமே இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு இருந்தது என்பதற்கு ஆணித்தரமான முதன்மைச் சான்றுகள் எதையும் அவர்களால் முன்வைக்க இயலவில்லை. ஆனால், இந்த அவதூறு வெறும் கட்டுக்கதை தான் என்பதை நிரூபிக்கவும் இருவருக்கும் இடையிலான உறவு மிகச் சுமுகமாகவும் இருந்தது என்பதை நிரூபிக்கவும் நம்மால் முதன்மைச் சான்றை முன்வைக்க முடியும். ஸ்டாலினின் மெய்க்காவலர் படைத் தலைவராக இருந்த அலெக்சி ரைபின் அவர்களை விட இது குறித்து முதன்மைச் சான்றை முன்வைக்கக் கூடியவர் வேறெவரும் இருக்க முடியாது. அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து தனது நினைவுக் குறிப்புகளில் அலெக்சி ரைபின் பின்வருமாறு கூறினார் :

 

கிரோவ் அடிக்கடி ஸ்டாலினின் இருப்பிடத்திற்கு வருவார், அவரது படுக்கையில் கூடத் தூங்குவார். அவர்கள் இருவரும் ஒன்றாக நீராவிக் குளியலும் எடுத்துக் கொள்வார்கள். பொலிட்பீரோவில் இருந்த வேறு எவருக்கும் ஸ்டாலினுடன் அத்தகைய தோழமையும் புரிதலும் இருக்கவில்லை. கிரோவ் ஒரு திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள போல்ஷிவிக் என்று ஸ்டாலின் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார். கடைசி காங்கிரசில் கிரோவ் மிகத் திறமையாகச் செயல்பட்டார், புகாரின், ஜினோவியேவ் மற்றும் கமீனவ் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், டிராட்ஸ்கி குறித்து அவர் பின்வருமாறு கூறினார், இதுபோன்ற புனிதமான ஒரு காங்கிரசில் அவரது பெயர் சொல்லப்படுவதற்காகவே அவரை மூன்று முறை தண்டிக்கலாம்” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 28).

 

ஸ்டாலினின் மெய்க்காவலர் அலெக்சி ரைபின் இது குறித்து தொடர்ந்து கூறுவதைக் கவனிப்பது அவசியம் ஆகும். “…ஜனவரி ஒன்றாம் தேதி.. அன்று மாலை தோழர் ஸ்டாலின் மற்றும் எனது கமாண்டன்ட் ஸ்மிர்னோவ், கமிசார் லியுபோவிட்ஸ்கி ஆகியோராடு நானம் கிரோவை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். ஸ்டாலின் கிரோவை ஆரத் தழுவியபடி, அவருடன் ரெட் புல்லட் என்றழைக்கப்பட்ட ரயிலின் பெட்டிக்கு உள்ளே வரை கொண்டு போய் விட்டார். டிசம்பர் 1 அன்று கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். டிசம்பர் 2 அன்று மொலடோவ் மற்றும் வொரோஷிலோவ் ஆகியோர் உடனடியாக லெனின்கிராடுக்கு விரைந்தனர். அது ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்தான காலம். எனவே, செர்ழீன்ஸ்கி தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, லெனின்கிராடுக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றது. ஸ்டாலின் மிகவும் துயரமுற்றவராக இருந்தார், அவரது முகம் கருத்துப் போயிருந்தது, அவரது முகம் துடிப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இறந்து கிடந்த கிரோவின் உதட்டில் முத்தமிட்டு, “விடை கொடுக்கிறேன் எனது இனிய நண்பனேஎன்று அழுதபடியே கூறினார் ஸ்டாலின். ஸ்டாலினின் மனைவியின் இறப்புக்குப் பின்னர், ஸ்டாலினோடு கிரோவ் அளவுக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் வேறு யாரும் கிடையாது.” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஏ.டி. ரைபின் (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 29). ஸ்டாலினுக்கும் கிரோவ்க்கும் இடையிலான உறவு பற்றிய டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவக் கட்டுக்கதைகளைத் தாண்டி, உண்மை வேறெங்கோ ஒரு தளத்தில் இருந்தது என்பதை இதை விடத் தெளிவாக யாரும் எடுத்துக் காட்டி இருக்க முடியாது. 

 

சனி, 6 பிப்ரவரி, 2021

லெனின் இறுதிச் சடங்கில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளாதது ஏன்?

 



ஜனவரி 21, 1924ஆம் ஆண்டு அன்று லெனின் உயிரிழந்தார். அன்று மருத்துவ ஓய்வு எடுப்பதற்காக டிராட்ஸ்கி சுகுமி என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். டிப்லிஸ் நகரத்தை வந்தடைந்த போது லெனின் உயிரிழந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆகவும், லெனினுக்குப் பிறகு சோவியத் அதிபர் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் என்று மேற்குலகப் பத்திரிகையாளர்களால் முன்னிறுத்தப் பட்டவரும் ஆகிய டிராட்ஸ்கி லெனினது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. 


மாறாக, லெனின் இறந்து விட்ட தகவல் கிடைத்த பின்னரும் கூட முன் கூட்டியே திட்டமிட்ட படி ஓய்வு எடுப்பதற்கான தனது பயணத்தைத் தொடர்ந்தார். சோவியத் யூனியன் முழுவதும் தனது மாபெரும் தலைவனின் இழப்பை எண்ணி வருந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, தன்னை லெனினின் அரசியல் வாரிசு ஆகக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கியோ ஒரே ஒரு அஞ்சலிச் செய்தி அனுப்பி விட்டு ஒரு ரிசார்டில் (Resort) உல்லாசமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்! லெனினின் இறுதி நிகழ்வுகளில் அவர் பங்கு பெறாதது அவரது அரசியல் வாழ்வுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்தது என்று கூறினால் அது கொஞ்சமும் மிகையாகாது. ஆனால் இது தனது அரசியல் வாழ்வுக்குச் சாவு மணி அடிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பது நிச்சயம். அக்கால சோவியத் அரசியல் நிகழ்வுகள் பற்றி எழுதிய அனைவரும் டிராட்ஸ்கியின் இந்தச் செயலை மாபெரும் அரசியல் தவறு என்றே குறிப்பிடுகின்றனர். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்த காரணத்தால் காகசஸ் பகுதியில் ஓய்வெடுக்கச் சென்று கொண்டு இருந்த போது இந்தத் தகவல் தனக்குக் கிடைத்ததால் லெனினது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று டிராட்ஸ்கி கூறியதைச் சுட்டிக் காட்டும் டேவிட் எம் கோலே என்னும் நூலாசிரியர், அவரது இடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் லெனின் சடலத்தின் அருகில் நின்றிருப்பார் என்று எழுதினார் (David M Cole. Joseph Stalin : Man of Steel, Rich & Cowan, 1942, London, Page 61).

 

லெனினது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்த போது அதற்கு விசித்திரக் காரணம் ஒன்றைக் கூறினார் டிராட்ஸ்கி. அவர் எப்போதும் செய்வது போல இதற்கும் ஸ்டாலினைக் குற்றச்சாட்டினார்.

 

லெனின் இறந்த ஒரு சில மணி நேரங்களுக்குள் டிப்லிசியில் இருந்த டிராட்ஸ்கிக்கு அது தெரிவிக்கப்பட்டது. உடனடியாகத் தான் கிரெம்ளினைத் தொடர்பு கொண்டதாகவும், ஜனவரி 26 சனிக்கிழமை அன்று உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதால், அதற்குள் மாஸ்கோ வந்து சேர்வது சாத்தியம் இல்லை என்றும், ஆகவே தான் மருத்துவ சிகிச்சையைத் தொடரலாம் என்றும் தனக்குச் சொல்லப்பட்டதாகவும், ஆகவே தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்றும் டிராட்ஸ்கி தனது வாழ்க்கை வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்! பிறகு முன்னர் அறிவிக்கப்பட்டது போல சனிக்கிழமை அன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவில்லை மாறாக, ஞாயிற்றுக் கிழமை அதாவது ஜனவரி 27 அன்று தான் உடல்அடக்கம் செய்யப்பட்டது என்றும் அதற்குள் தன்னால் எப்படியும் மாஸ்கோ சென்றடைந்து இருக்க முடியும் என்றும் கூறிய டிராட்ஸ்கி “இது நம்ப முடியாததாகத் தோன்றலாம், ஆனால் இறுதிச் சடங்கு நடைபெறும் தேதி குறித்த விசயத்தில் கூட நான் ஏமாற்றப்பட்டேன்” என்றார், தான் சொல்லும் கதை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தது ஆக இல்லை என்பது அவருக்கே நன்கு தெரிந்து இருந்தது.


இது குறித்து எழுதிய அனைத்து எழுத்தாளர்களும் டிராட்ஸ்கி கூற்றின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். சோவியத் அரசின் போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கி உண்மையில் லெனினது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பி இருந்தால் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு நிச்சயம் அதில் கலந்து கொண்டிருக்க முடியும். தேவைப்பட்டால் அதற்காக அவர்  ஒரு சிறப்பு விமானத்தையே கூடப் பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி எதையும் டிராட்ஸ்கி மேற்கொள்ளவே இல்லை. மேலும், பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது ஆவணங்களில் அவருக்கு இவ்வாறு தவறான தகவல் அளிக்கப்பட்டதை உறுதி செய்யும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. டிராட்ஸ்கியின் கேவலமான ஈகோவைத் தவிர இந்தத் தவறுக்கு வேறெந்தக் காரணமும் சொல்ல முடியாது. உண்மையில் டிராட்ஸ்கியின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்வாக அது அமைந்திருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.


புதன், 20 ஜனவரி, 2021

போலந்தை ஆக்கிரமித்ததா சோவியத் யூனியன்?




செப்டம்பர் 17, 1939 அன்று சர்வதேச எல்லையைக் கடந்து போலந்து நாட்டுக்குள் நுழைந்து பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது சோவியத் செஞ்சேனை. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் போலந்தைத் தாக்கி அதன் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தது இட்லரின் நாஜிப் படைகள்.

அன்று முதல் இன்று வரை மேற்குலக நாடுகளும் டிராட்ஸ்கிய ஏஜெண்டுகளும் சோவியத் யூனியனின் இந்த நடவடிக்கையை இட்லருடன் கூட்டாக மேற்கொண்ட ஆக்கிரமிப்பு என்றும், நாஜிக்களுக்கு இணையாக மேற்கொள்ளப்பட்ட நாடு பிடிக்கும் செயல் என்றும் பிதற்றித் திரிகின்றனர்.
ஆனால் வரலாற்று உண்மைகள் வேறு வகையானவை ஆக இருக்கின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு முன்னரே போலந்து மீது நாஜித் தாக்குதலை எதிர்நோக்கிய சோவியத் யூனியன் அந்நாட்டுக்கு உதவியளிக்கத் தயாராக இருந்தது. ஆனால் நாஜி ஜெர்மனியை விட சோவியத் யூனியனை அதிகம் வெறுத்த போலந்து ஆட்சியாளர்கள், இதனை ஏற்கத் தயாராக இல்லை. பிரான்சும் இங்கிலாந்தும் இதனை ஆதரிக்க மறுத்தன.
இதன் விளைவாக நாஜித் தாக்குதலில் இரண்டே நாளில் போலந்து விமானப்படை முடங்கியது, அந்நாட்டு ராணுவம் சிதறி அழிந்தது, அரசுத் தலைவர்கள் ஓடி விட அங்கு அரசு என்பதே இல்லாமல் போனது. சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சரியான களமாகியது போலந்து. அந்நாட்டைக் கைப்பற்றி தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பால்டிக் நாடுகளுக்குள் முடிந்த வரை ஊடுருவிக் கைப்பற்றுவது என்பது தான் இட்லரின் அறிவிக்கப் படாத திட்டமாகும்.
இந்த நிலையில் தான் கிழக்குப் பகுதியில் இருந்து போலந்துக்குள் நுழைந்தது சோவியத் செஞ்சேனை. இது குறித்து போர் அறிவிப்பு எதையும் சோவியத் யூனியன் வெளியிடவில்லை, ஏனெனில் அந்தத் தேதியில் போலந்து என்ற தனி நாடே இல்லாமல் போனது, அரசும் இருக்கவில்லை. ஆனால் போலந்து மீது சோவியத் யூனியன் படையெடுத்தது என்று பொய்யர்கள் இன்று வரை பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரித்தானிய தலைவர்கள் கூட இட்லரைத் தடுத்து நிறுத்துவதில் இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்பதை வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள வேண்டி இருந்தது.
மேலும், போலந்து மக்கள் செஞ்சேனையை எதிர்க்கவில்லை என்பது மட்டுமின்றி அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று சோவியத் டாங்கிகளுக்கு மாலை அணிவித்தனர்.
அது மட்டுமின்றி, மிகத் தெளிவாகத் திட்டமிடப் பட்டு அதை விடத் துல்லியமாக நிறைவேற்றப் பட்ட அசாத்தியமான ராணுவ நடவடிக்கையாக அது இருந்தது என்பது மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
“ஒரு வினாடி கூடத் தவறாமல் அதற்கு நேரம் குறிக்கப் பட்டதாகத் தோன்றுகிறது.... அரைநாள் முன்னதாக இது நடந்திருந்தால், போலந்தில் எங்காவது போலந்து அரசு இருந்திருக்கும், ருஷ்யப் படைகள் நுழைந்தது போர் என்று பிரகடனப் படுத்தப் பட்டு இருக்கும். மாறாக அரை நாள் தாமதமாக நடந்திருந்தால் தெற்கு ருமேனியாவிற்குள்ளும், வடக்கில் பால்டிக் நாடுகளுக்குள்ளும் ஜெர்மானியர்கள் நுழைந்து கொண்டிருப்பதை ருஷ்யர்கள் வேடிக்கை பார்க்க நேரிட்டு இருக்கும். போலந்து அரசு ஓடி மறைந்து விட்ட – ஆனால் ஜெர்மானியர்கள் போர் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான லிவோவ் மற்றும் வில்னாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் – அந்தத் துல்லியமான அரைநாளில் செஞ்சேனை அங்கே நுழைந்தது” என்று அன்னா லூயி ஸ்டிராங் இது பற்றிக் குறிப்பிட்டார்.
சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜித் தாக்குதலை ஓரளவு தள்ளிப் போடவும், இட்லருக்கு மிகச் சரியான எச்சரிக்கை விடுப்பதற்கும் ஆன செயலாக இது மாறியது.
இதனைத் தான் போலந்தை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது என்பதாக எந்த விதப் புரிதலும் இல்லாத டிராட்ஸ்கிய சல்லிகளும் அவர்களது மேற்குலக எஜமானர்களும் இன்று வரை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சோவியத் தாயகத்தை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு பறிபோனதே என்ற ஆதங்கம் அவர்களை இப்படிப் பேச வைக்கிறது என்பதே உண்மை.

சனி, 28 நவம்பர், 2020

மக்கள் தலைவன்



மக்கள் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், நெருக்கடியான தருணத்தில் நாட்டையும் மக்களையும் எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக வாழ்ந்து காட்டியவர் ஸ்டாலின்.

ஜூன் 22, 1941 அன்று நாஜி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தனது நாசகாரத் தாக்குதலைத் தொடங்கியது. மிக விரைவாக பல பகுதிகளைக் கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்தி முன்னேறியது ஜெர்மன் படை. அக்டோபர் 2, 1941 அன்று மாஸ்கோ நகரத்தின் மீது தனது முதலாவது தாக்குதலைத் தொடங்கியது.

மாஸ்கோ நகரத்தில் இருந்து முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் வெளியேற்றப் பட்டனர். நகரைப் பாதுகாப்பதற்குக் கடுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டது செம்படை. மாஸ்கோ நகர மக்கள் அனைவரும் இறுதி யுத்தத்திற்கு முழு வேகத்துடன் செம்படைக்கு உதவினர். தோழர் ஸ்டாலின் நகரப் பாதுகாப்புக்கான கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரடியாகத் தாக்குதலுக்கு வழிகாட்டினார். ஜெர்மன் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நகரின் பல பகுதிகளுக்குச் சென்று போர் நடவடிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தார். தினமும் தடுப்பு அரண்கள், பதுங்கு குழிகள் என ஒவ்வொன்றையும் பார்வையிட்டு தேவைப்பட்ட போது மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு உடனடி உத்திரவிட்டு நடைமுறைப் படுத்தினார். ஒரு சில இரண்டாம் நிலைத் தலைவர்கள் கூட மனமொடிந்து சோர்ந்து போன போதும், முழுமையான மன உறுதியுடன் செயல்பட்டார். நாம் தான் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் வேண்டாம் என்று மாஸ்கோ நகர மக்களுக்கு நேரடியாக அறிவுறுத்தினார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மோசமான போது அரசுத் தலைமையகத்தை குய்பிஷேவ் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்ட போதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர்களை அனுப்பி விட்டு தான் கடைசி வரையில் மாஸ்கோவில் மட்டுமே இருப்பது என்று உறுதியுடன் செயல்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நவம்பர் புரட்சி தினம் அன்று, இத்தனை அச்சுறுத்தல்களுக்கும் நடுவே மாஸ்கோ நகரில் படைகளின் வெற்றிப் பேரணியையும் நடத்தினார்!

இத்தகைய அசாதாரணச் செயல்களைச் செய்யக் கூடிய தலைவன் வேறு யாரும் இருக்க முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பின்னர், அந்த வெற்றிக்குக் காரணம் ஸ்டாலின் தான் என்று சொன்ன போது அதை மறுத்து, இல்லை சோவியத் மக்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னார்!



திங்கள், 2 நவம்பர், 2020

டிராட்ஸ்கி குறித்து லெனின் மனைவி குரூப்ஸ்கயா

 


டிராட்ஸ்கியின் உண்மை முகம் பற்றி லெனினது மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிவது ஆர்வமூட்டுவது ஆகும்.
“டிராட்ஸ்கியவாதிகளும் ஜினோவியவாதிகளும் வெகுஜனங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்கள் யதார்த்த உலகத்தில் வாழவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மிக முக்கியமான எதிரிகளான கெஸ்டபோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதன் மூலமாகக் கூட அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றி மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் சோவியத்துகளின் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது முதலாளித்துவ சுரண்டலையும் முதலாளித்துவ கட்டமைப்பையும் மீண்டும் ஸ்தாபிக்க முயற்சி செய்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளாத டிராட்ஸ்கி, சோசலிசத்தை கட்டியெழுப்புவதில் மக்களின் பங்கு குறித்தும் புரிந்து கொள்ளவே இல்லை, இது ஒரு தற்செயல் நிகழ்வு கிடையாது.
மேலிருந்து உத்தரவிடுவதன் மூலம் மட்டுமே சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று நினைத்து, இப்போது சோசலிசத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு உதவுகின்ற ஸ்டாலின், வோரோஷிலோவ் மற்றும் பொலிட்பீரோவின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நிற்கிறார்.
ஆகவே, டிராட்ஸ்கி, கமெனேவ் மற்றும் ஜினோவியேவ் ஆகியோரின் கொள்கையற்ற கூட்டணி, லெனினது பணிகள், வெகுஜனங்களின் பணி, சோசலிச இலட்சியங்கள் ஆகியவற்றை முன்னெப்போதும் கேள்விப்பட்டிராதவாறு காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை ஒரு படுகுழியில் இருந்து மற்றொரு ஆழமான படுகுழிக்குத் தள்ளி வருகிறது. இது தற்செயலானது அல்ல. டிராட்ஸ்கி, ஜினோவியேவ்,
கமெனேவ் மற்றும் அவர்களது கொலையாளிகள் குழு முழுவதும் ஜெர்மானிய பாசிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டன, கெஸ்டபோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.” (Why is the Second International Defending Trotsky)
டிராட்ஸ்கியின் "பெருமை"களை எத்தனை சிறப்பாகக் கூறி இருக்கிறார் நதேழ்தா குரூப்ஸ்கயா!!!

போர் கமிசார் டிராட்ஸ்கி

சோவியத் உள்நாட்டுப் போர் காலத்தில் போர் கமிசார் ஆக இருந்தவர் டிராட்ஸ்கி.
அந்த வகையில் செஞ்சேனையின் தலைமை அதிகாரம் அவரிடம் இருந்தது என்று கூறலாம்.
அதனால் ஏதோ டிராட்ஸ்கி தான் மல்லாக்க விழுந்து கிடந்த சோவியத் யூனியனைத் தனியனாக இருந்து கொண்டு செங்குத்தாகத் தூக்கி நிறுத்தினார் என்பது போலவும், அவர் மட்டும் இல்லாதிருந்தால் சோவியத் யூனியன் சிதறிப் போயிருக்கும் என்பது போலவும் பொய்ச் சித்திரத்தை உருவாக்க டிராட்ஸ்கியப் பொய்யர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
சாரிட்சன் போர் முதல் பிரேமின் யூரல்ஸ், பெத்ரோகிராத், கிரஸ்னயா கொர்க்கா, டோனெட்ஸ், கார்கொவ், லவோவ் என ஏராளமான போர் முனைகளில் பெறப்பட்ட திருப்புமுனை வெற்றிகளுக்கு ஸ்டாலினே காரணமாக இருந்தார்.
அதனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், லெனினும் அவரைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்முனைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
சில போர் முனைகளில் - குறிப்பாக சாரிட்சன் மற்றும் டோனெட்ஸ் பகுதிகளில் – செம்படைகளின் சறுக்கலுக்கு டிராட்ஸ்கி நேரடிக் காரணமாகவே இருந்தார். அதனை மாற்றியமைப்பவராக ஸ்டாலின் இருந்தார். தனது பணிகளில் டிராட்ஸ்கி தலையிடக் கூடாது என்ற ஸ்டாலினின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு தெற்குப் போர் முனைக்கு அவரை அனுப்பியது சோவியத் கம்யூனிஸ்டு கட்சி!!!
சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் எட்டாவது காங்கிரசில் அவரது அபத்தமான முடிவுகளுக்காக டிராட்ஸ்கி கடுமையாக விமரிசிக்கப் பட்டார்.

ஆக, உள்நாட்டுப் போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கியால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக அது அவரையும் மீறி பறித்தெடுக்கப்பட்ட வெற்றி (Not because of Trotsky but despite Trotsky) என்பது உறுதியாகத் தெரிகிறது. 




  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...